ஜெ.வுக்கு 'பேஸ் மேக்கர்' பொருத்தினோம், காய்ச்சல் என்பது தவறான தகவல்: அப்பல்லோ டாக்டர் சினேகா
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவுக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர் சினேகாஸ்ரீ ஆறுமுகசாமி ஆணையம் முன்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம் முன்பு அப்பல்லோ மருத்துவர் சினேகாஸ்ரீ செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
ஜெயலலிதாவுக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு சென்ற ஆம்புலன்ஸில் நானும் சென்றேன்.
அங்கு ஜெயலலிதா மயக்க நிலையில் நாற்காலி ஒன்றில் அமர வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படவில்லை. போயஸ் கார்டன் பணியாளர்கள் உதவியுடன் ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆம்புலன்ஸில் சசிகலா, மருத்துவர் சிவகுமார் ஆகியோரும் உடன் வந்தனர்.
இதயத்துடிப்பு சீராக இருக்க அவருக்கு மருத்துவமனையில் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடால் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்பட்ட தகவல் தவறானது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்சில் சென்றபோது நான் எங்கு இருக்கிறேன் என்று ஜெயலலிதா தன்னிடம் கேட்டதாக சசிகலா ஆணையத்தில் வாக்கமூலம் அளித்தார். ஆனால் சினேகாஸ்ரீயோ மருத்துவமனையை அடையும் வரை ஜெயலலிதா மயக்கத்தில் இருந்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.