ஜெ. இடைத்தேர்தலை சந்திப்பாரா? சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா? தீர்மானிக்கும் மே 23...
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்றுள்ள ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கும் நிலையில் இடைத்தேர்தலை சந்தித்து எம்.எல்.ஏ.வாக மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா? அல்லது சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்வாரா என்பதை வரும் 23-ந் தேதி தீர்மானிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதால் ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். தற்போது இந்த வழக்கில் இருந்து விடுதலையாகி உள்ளார். இதனால் மீண்டும் முதல்வராக அவர் பதவியேற்க இருக்கிறார்.

அப்படி ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் 6 மாதத்துக்குள் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஆளும் அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலம் முடிவதற்கு ஓராண்டே உள்ள நிலையில் ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பிருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
- ஒரு ஆட்சியின் பதவிக் காலம் என்பது முதலாவது சட்டசபை கூட்டப்பட்ட நாளில் இருந்துதான் கணக்கிடப்படும்.
- இதன்படி ஆளும் அண்ணா தி.மு.க. அரசின் ஆட்சிக் காலம் வரும் மே 23-ந் தேதியுடன் 4 ஆண்டை நிறைவு செய்கிறது.
- பொதுவாக ஒரு ஆட்சிக் காலத்தின் கடைசி ஓராண்டில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். ஒரு மாநில அரசால் தேர்தல் ஆணையத்தை நிர்பந்திக்க முடியாதாம்..
- அதேநேரத்தில் 4ஆவது ஆண்டு நிறைவடைவதற்கு முன்னரே அதாவது மே 23-ந் தேதிக்கு முன்னர் ஒருவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலை நடத்துங்கள் என தேர்தல் ஆணையத்தை மாநில அரசு நிர்பந்திக்க முடியுமாம்.
- இதனால் இடைத்தேர்தலை கட்டாயம் நடத்துகிற சூழ்நிலை தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும்.
- ஒருவேளை 6 மாதங்கள் முதல்வராக பதவி வகித்து விட்டு ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு 6 மாதத்துக்கு முன்பே ஜெயலலிதா தமது பதவியை ராஜினாமா செய்கிறார் எனில் தேர்தல் ஆணையம் உடனேயே சட்டசபை பொதுத் தேர்தலை நடத்திவிடாதாம்...
- தேர்தல் ஆணையம் நினைத்தால் மேலும் 6 மாதங்களுக்கு அதாவது அடுத்த மே மாதம் கூட சட்டசபை பொதுத்தேர்தலை நடத்தலாமாம்.
- ஏனெனில் அப்போது அதாவது மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநில சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால் இந்த மாநிலங்கள் அனைத்துக்கும் ஒரு சேர தேர்தல் நடத்தவே தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்..
- ஆக மே 23-ந் தேதிக்கு முன்னர் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தமது பதவியை ராஜினாமா செய்தால் ஜெயலலிதா இடைத்தேர்தலை எதிர்கொள்வார்...
- அப்படி மே 23-ந் தேதி வரை எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் தமது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஜெயலலிதா முடிவு செய்துவிட்டார் என்றே கருத வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..












Click it and Unblock the Notifications