நிதிஆயோக் கூட்டத்தில் "அவசர அரசு அலுவலால்" பங்கேற்கவில்லை: பிரதமருக்கு முதல்வர் ஜெ. கடிதம்
சென்னை: டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் அவசர அரசு அலுவல்களால் தம்மால் பங்கேற்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை, நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதம்:
நிதிஆயோக் அமைப்பின் துணை தலைவர் டாக்டர் அர்விந்த் பனகாரியாவிடம் இருந்து டெல்லியில் இன்று நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்புக் கடிதம் கடந்த 7-ம் தேதியன்று வந்தது.
ஆனால், இங்கு வேறு சில அவசர அரசு அலுவல்கள் இருப்பதாலும், அவற்றை வேறு தேதிக்கு மாற்ற வாய்ப்பில்லாததாலும் நான் இன்று நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், எனது சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லி அனுப்பிவைப்பதாக இருந்தேன். அவருடன் திட்டம் மற்றும் வளர்ச்சி துறை முதன்மைச் செயலரையும் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், நிதிஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் மாநில முதல்வருக்கு பதிலாக வேறு ஒருவர் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் எனது கருத்துகளை அச்சிட்டு நிதிஆயோக் அமைப்புக்கு அனுப்பியுள்ளேன். தமிழக அரசின் கருத்துகளை, கோரிக்கைகளை மத்திய அரசு நிச்சயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications