அதிமுகவின் அடுத்த பொதுச்செயலரும் முதல்வரும் நானே... மீண்டும் முருங்கைமரம் ஏறும் ஜெயக்குமார்!
தமக்கு முதல்வர் பதவி எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வலம் வருகிறாராம் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை: அதிமுகவின் அடுத்த பொதுச்செயலரும் முதல்வரும் தாமே என அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி காட்டி வருவதை சக அமைச்சர்கள் மிரட்சியாக பார்க்கின்றனர்.
தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் திடீரென ஜெயலலிதாவால் தூக்கியடிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். இதற்கு காரணமே, தம்மை ஒரு முதல்வராக நினைத்து தடபுடலாக பிறந்தநாள் கொண்டாடினார் ஜெயக்குமார் என்பதுதான்.
சட்டசபை தேர்தலில் எப்படியோ மீண்டும் சீட் கிடைத்து அமைச்சராகவும் ஆகிவிட்டார் ஜெயக்குமார். ஜெயலலிதா இருந்தவரை அமைதியாக மீன்வளத்துறையை மட்டும் பார்த்து கொண்டிருந்தவர் எடப்பாடி ஆட்சியில் நெம்பர் 2 இடத்துக்கு நிதி அமைச்சராக முன்னேறினார்.

ருத்ர தாண்டவம்...
அவ்வளவுதான் ஜெயக்குமாரின் ருத்ர தாண்டவம் உச்சத்தை எட்டியது.... அதுவும் தினகரனும் சிறைக்கு போனபின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட, சூப்பர் முதல்வர் என விமர்சிக்கும் அளவுக்கு செம ஆட்டம் போட தொடங்கினார் ஜெயக்குமார்.

எடப்பாடி படத்துக்கு தடை
எடப்பாடிக்கு அடுத்து தமக்குதான் முதல்வர் பதவி; சசிகலா இல்லாத நிலையில் தாமே அதிமுக பொதுச்செயலர் என்கிற கோதாவில் வலம் வருகிறாராம் ஜெயக்குமார். இதனால் தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான போஸ்டர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா அதற்கடுத்து தமது படம் மட்டுமே இடம் பெறவேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளாராம்.

ஜெயக்குமாருக்கு ஆப்பு ரெடி?
ஏற்கனவே தினகரன் தரப்பின் முழு கோபமும் ஜெயக்குமார் மீதுதான் இருக்கிறது. ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரை கழற்றிவிட தினகரன் கோஷ்டி தருணம் பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால் எடப்பாடி தரப்போ கொங்கு கோஷ்டியை சேர்ந்த தங்கமணி, வேலுமணியை தக்க வைக்க ஜெயக்குமாரை தூக்கியடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

சூப்பர் டூப்பர் முதல்வர்
இதையெல்லாம் உணர்ந்தும் கூட ஏதோ ஒரு நம்பிக்கையில் சூப்பர் டூப்பர் முதல்வராக, சுயேட்சை முதல்வராக வலம் வருகிறார் ஜெயக்குமார். விடாது கருப்பாய் ஜெயக்குமாரை துரத்தும் இந்த முதல்வர் ஆசை நிறைவேறுமா? மண்ணோடு மண்ணாகிப் போகுமா? என்பதுதான் அதிமுகவினரின் ஹாட் டாபிக்.












Click it and Unblock the Notifications