இயேசு வழியில் அன்புகாட்டுங்கள்... ஜெ., வைகோ, விஜயகாந்த் ஈஸ்டர் வாழ்த்து
சென்னை: அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்து காட்டிய இரட்சகர் இயேசுபிரானின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள ஈஸ்டர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா வாழ்த்து
கருணையின் வடிவ மான இயேசுபிரான் உயிர்த் தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உன் மீது நீ அன்பு செலுத்துவது போல பிறர் மீதும் அன்பு செலுத்துவாயாக" என்று மனித நேயத்தின் மாண்பினையும், அன்பு செலுத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்த இயேசு பிரான், சிலுவையில் அறையப்பட்ட பின்பு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.
பகைவர்களையும் இரட்சிக்கும் பரந்த மனம் கொண்ட இயேசுபிரான், தம்மை சிலுவையில் அறைந்தவர்களைப் பார்த்து, "தாங்கள் செய்வது இன்ன தென்று அறியாதிருக்கிறார்கள், இவர்களை மன்னியும்" என்று இறைவனிடம் வேண்டி தனது எல்லையில்லா இரக்க குணத்தை உலகத்தார்க்கு உணர்த்தினார்.
அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்து காட்டிய இரட்சகர் இயேசுபிரானின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

வைகோ வாழ்த்து
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "மனித குலத்தின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதோடு, அழுத்தும் துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை ஒளி ஏற்றும் உன்னதத் திருநாள்தான், உலகெங்கும் கிறித்தவ மக்கள் போற்றிக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளாகும்.
காலம் காலமாக தமிழகம் சமய நல்லிணக்கத்தைப் போற்றி வருகிறது. ஆனால் சகிப்புத்தன்மைக்கும், சமய ஒற்றுமைக்கும், மதச்சார்பற்ற கொள்கைக்கும் அறைகூவலும் அச்சுறுத்தலும் தலைதூக்கி வரும் இன்றைய காலகட்டத்தில் இயேசுநாதரின் அமுத மொழிகளை நினைவில் கொண்டு மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க ஈஸ்டர் பண்டிகை நாளன்று உறுதி ஏற்போம்!

ஜி.கே.வாசன் வாழ்த்து
இயேசு கிறிஸ்து மறைந்து மீண்டும் உயிர்த்தெழுந்த 3 ஆம் நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
குறிப்பாக கல்வித் துறையிலும், மருத்துவத் துறையிலும் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு தொண்டாற்ற தொண்டு நிறுவனங்களை நிறுவி, சிறப்பாக சேவை செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. கிறிஸ்தவ சமுதாய மக்கள் பணி தொடரவும், வளரவும், அவர்களது வாழ்வு செழிக்கவும், அவர்கள் ஒற்றுமையாகவும், பாதுகாப்புடனும், அமைதியாகவும் வாழ ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

விஜயகாந்த் வாழ்த்து
ஏழைகளுக்கு இரக்கம் காட்டி, எதிரிகளுக்கும் அருள் செய்ய வேண்டும், பாமரர்களுக்கும் அன்புகாட்டி உதவி செய்திட வேண்டுமென மனித குலத்தை வாழ்விக்க இறைத்தூதர் இயேசுநாதர் அவர்கள் அளித்த போதனைகள் சிறப்பானதாகும். உலகில் அமைதி நிலவ, மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத் திருநாளாக மலரட்டும். நம்மாலான உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு செய்திட வேண்டும்.
ஏழைகளுக்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். "இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே" என்பது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை முழக்கமாகும். இந்நாளில் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும், தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சரத்குமார் வாழ்த்து
சிலுவையில் மரித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த புனித நன்னாளம் ஈஸ்டர் திருநாள் உலகெங்கும் கிறிஸ்தவ பெருமக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே - என்னிடத்தில் வந்து இளைப்பாறுங்கள் என்று அனைவரின் பாவச்சுமைகளை தான் ஏற்று அன்பையும், கருணையையும், பிரதிபலனாக உலகிற்கு அளித்த ஏசுபிரானின் போதனைகள், மனித குலம் தழைத்தோங்கச் செய்யும் மகத்துவம் மிக்கவை. அன்பும், சகோதரத்துவமும், மனித நேயமும், சக மனிதர்களிடையே நிலைபெற்று நின்று புவி எங்கும் சமாதானம் தழைத்தோங்கும் விதமாக இந்த ஈஸ்டர் திருநாள் அமைந்திட நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக. விரதம் முடித்து ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சொந்தங்களுக்கு என் அன்பான நல்வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறேன்.











Click it and Unblock the Notifications