5 பேர் பலி.. குவிந்த கண்டனங்களால் பணிந்த ஜெ... திருச்சி பிரச்சார நேரத்தை மாலைக்கு மாற்றினார்!
சென்னை: கொளுத்தும் வெயிலில் மக்களை வாட்டி வதக்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா, 5 உயிர்கள் பலியான பின்னர் தற்போது பிரச்சாரம் செய்யும் நேரத்தை மாற்றியுள்ளார். பிற்பகலில் பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா, திருச்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறார் ஜெயலலிதா.
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் களம் காண்கிறது. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினரும் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளர்கள்-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 9ம்தேதி மாலை 6மணிக்கு சென்னை தீவுத்திடலில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
11ம்தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலும், 13ம்தேதி தர்மபுரியிலும், 15ம்தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும், 18ம்தேதி காஞ்சிபுரத்திலும், 20ம்தேதி சேலத்திலும் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
இதில் சென்னை, காஞ்சிபுரத்தில் மட்டுமே மாலை நேரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். விருத்தாச்சலம், அருப்புக்கோட்டை, தருமபுரி, சேலத்தில் பிற்பகல் நேரத்தில் சுடும் வெயிலில் பிரச்சாரம் செய்தார்.

ஜெயலலிதா பிரச்சாரம்
லட்சக்கணக்கான மக்கள் வெயில் வாடி வதங்கிப்போய் அமர்ந்திருக்க, பிரம்மாண்ட மேடையில் ஏசிகள் புடை சூழ, அதிமுக ஆட்சியில் வசந்தம் வீசுகிறது என்று கூறினார். ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பல தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். வெயிலின் கொடுமைக்கு 5 உயிர்கள் பலியானது.

5 பேர் பலி
சேலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கடும் வெயில் கொடுமைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இரண்டு பேர் உயிரிழந்தனர். விருத்தாச்சலம் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெயிலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

வலுக்கும் எதிர்ப்பு
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் எழுந்தது. தொடர்ச்சியாக ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் மனித உயிர்பலிகள் நடந்து வருகின்றன. மந்தைகளைப் போல மனிதர்களை நடத்துவதாலேயே உயிர்பலிகள் நடப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

எதிர்கட்சிகள் கொதிப்பு
பொதுக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் மனு அளித்துள்ளார். ஜெயலலிதா மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் பாமக மனு அளித்துள்ளது.

பிரச்சார நேரம் மாற்றம்
இந்நிலையில், திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா இன்று பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதாவின் பிரச்சார நேரம் மாலை நேரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்தே ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார். இரவு நேரங்களில் ஹெலிகாப்டர் இயங்க முடியாது என்பதாலேயே மதிய வேளைகளில் ஜெயலலிதா பிரச்சாரம் திட்டமிடப்பட்டது.

தனி விமானம் டூ ஹெலிகாப்டர்
திருச்சியில் பிரச்சாரம் செய்ய உள்ள ஜெயலலிதா சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் பயணம் செய்கிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்ட மேடை இருக்கும் இடத்திற்குச் செல்கிறார். ஹெலிபேடில் இருந்து கார் மூலம் மேடைக்கு செல்கிறார் ஜெயலலிதா. பிரச்சாரம் முடிந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறார்.

தேர்தல் ஆணையம் கண்காணிப்பு
ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் தொண்டர்கள் பிற்பகல் 3 மணிக்கு மேல்தான் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குடிநீர் - ஜூஸ்
தொண்டர்களுக்கு விநியோகிக்க, 5 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள், மோர் குளுக்கோஸ் மற்றும் ஜூஸ் பாக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாருக்காவது மயக்கம், தலைசுற்றல், உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் அவர்களை அழைத்து செல்வதற்கு பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தின் வெவ்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications