ஜெ.வை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாம போச்சே - ராம மோகன் ராவ்
ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசித்தோம் ஆனால் முடியாமல் போனது என்று ராமமோகன ராவ் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை தர தம்பிதுரை உறுதியாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முடியாமல் போனது என்று தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பலரும் குற்றம் சாட்டினர். இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக சிலர் சாட்சியம் அளித்திருந்தனர். அது குறித்து சசிகலா பதில் அளிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தோர் மற்றும் அவர்கள் அளித்த சாட்சி விவரங்களை அளிக்க வேண்டும். அந்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதன் பின்னரே, சசிகலா பதில் அளிக்க முடியும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர், விசாரணை ஆணையத்தில் தெரிவித்திருந்தார்.
சாட்சி விவரங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் வழங்கியது. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் 28ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா ஆகியோரிடம் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
இதனையடுத்து குறுக்கு விசாரணையில் பங்கேற்க மேலும் 11 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று மருத்துவர்கள் ஆர்.முத்துசெல்வம், பி.கலா, பிரிட்டோ, பி.தர்மராஜன், பி.பாலாஜி, எம்.என். சங்கர் ஆகிய 6 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இன்று ஜெ.தீபக், மருத்துவர்கள் எம்.கே. முரளிதரன், எஸ்.தினேஷ் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன், ஐஏஎஸ் அதிகாரி ராம மோகனராவ் ஆகிய 5 பேர் ஆஜராக சம்மன் அனுப்பட்டது. சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான ராமமோகன ராவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை தருவது பற்றி கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.
சில காரணங்களால் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முடியாமல் போனது. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை தர தம்பிதுரை உறுதியாக இருந்தார் என்று ஆறுமுகசாமி ஆணையம் குறுக்கு விசாரணையில் ராமமோகன ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒபிஎஸ் கடந்த ஆண்டு தர்மயுத்தம் நடத்திய போது, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது, அவரை மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லலாம் என்று நான் விஜயபாஸ்கரிடம் கூறினேன். ஜெயலலிதாவுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிமுக தொண்டர்கள் நம்மை வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் விஜயபாஸ்கர் காதில் வாங்கி கொள்ளவில்லை என்று கூறியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications