அதிமுக வேட்பாளர் பட்டியலை 7வது முறையாக மாற்றிய ஜெ... 3 அமைச்சர்களுக்கு அடித்தது லக்!
சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏழாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்கள் எஸ்.பி சண்முகநாதன், ப.மோகன் பி.பழனியப்பன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழரசி, போலி டாக்டர் என்று புகார் எழவே அவரையும் மாற்றிவிட்டார் ஜெயலலிதா.
தமிழகத்தில் தகிக்கும் வெயில் ஒருபக்கம் அனலடிக்க அரசியல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருவதால், பிரச்சாரம் செய்வதில் அதிமுக வேட்பாளர்களிடையே ஒருவித தயக்கம் காணப்படுகிறது.
ஒருநாள் முதல்வர் போல ஒருநாள் வேட்பாளர்கள், ஒருவாரம் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிமுகவில் அதிகரித்து வருகிறது. எனவேதான் சுவர் விளம்பரங்களில் கூட வேட்பாளர்களின் பெயரை எழுதாமல் இரட்டை இலையை மட்டுமே அதிமுகவினர் வரைந்து வைத்துள்ளனர்

8 வேட்பாளர்கள் மாற்றம்
அதிமுக வேட்பாளர்களை 7வது முறையாக மாற்றி ஜெயலலிதா அறிவித்தார். கோவில்பட்டி, ஈரோடு மேற்கு, ஸ்ரீவைகுண்டம், பாளை, அரக்கோணம் (தனி) திருச்சி கிழக்கு, பாப்பிரெட்டிபட்டி, சங்கராபுரம் ஆகிய 8 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர்.

வேட்பாளர்கள் யார்? யார்?
பாளையங்கோட்டை அ.தமிழ்மகன் உசேனுக்கு பதிலாக எஸ்.கே.ஏ. ஹைதர் அலி போட்டியிடுகிறார். ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி சண்முகநாதனும் சங்கராபுரத்தில் ப.மோகனும் போட்டியிடுகின்றனர். அரக்கோணம்(தனி)-ரவி, திருச்சி கிழக்கு- வெல்லமண்டி நடராஜன், பாப்பிரெட்டிபட்டி-பழனியப்பன் புதிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு மேற்கில் வரதராஜனுக்கு பதிலாக கே.வி.ரமலிங்கம் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

3அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் 3 பேருக்கு ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பளித்தார். அமைச்சர்கள் எஸ்.பி சண்முகநாதன், ப.மோகன் பி.பழனியப்பன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

3 முறை அமைச்சர்
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2001, 2011 தேர்தல்களில் வெற்றி பெற்ற சண்முகநாதன் 3 முறை அமைச்சராகவும், 4 முறை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். முதல்முறையாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. ஸ்ரீ வைகுண்டத்தில் அதிமுக வழக்கறிஞர் டாக்டர் புவனேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

எஸ்.பி.சண்முகநாதனுக்கு லக்
பள்ளியில் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ஒரு பெண்ணிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக சண்முகநாத னின் உதவியாளர் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சண்முகநாத னுக்கு சீட் கிடைக்காததற்கு இதுவே முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் மீண்டும் போட்டியிடுகிறார் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அமைச்சர் பழனியப்பன்
தமிழக அமைச்சர்களில் முக்கியத்துவம் வாய்ந்த உயர் கல்வித்துறை அமைச்சராக வலம் வந்தவர் பழனியப்பன். தலைமையின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, பல அமைச்சர்கள் ஆளாகி மாற்றப்பட்ட போதும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக பழனியப்பன் இருந்து வந்தார்

பாப்பிரெட்டிபட்டியில் பழனியப்பன்
ஐவரணியில் இருந்த பழனியப்பன் மீது பினாமி பெயரில் சொத்து குவித்தது, தேர்தலில் சீட் வாங்கி தருவதாக, பல பேரிடம் பணம் பெற்றதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது மாற்றப்பட்ட வேட்பாளர் பட்டியலில் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மோகன்
விழுப்புரம் மாவட்டத்தில் கொடிகட்டி பறந்தவர் அமைச்சர் மோகன். சங்கராபுரம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் இவர் இல்லாமல் எந்த விழாக்களும் நடக்காது. ஆனாலும் ஆட்சியின் இறுதிகாலத்தில் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதன்காரணமாகவே இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

மீண்டும் வாய்ப்பு
இதே மாவட்டத்தில் அமைச்சர் மோகனின் பரம எதிரியான சி.வி. சண்முகத்துக்கும், குமரகுருவுக்கும் ஜெயலலிதா சீட் வழங்கினார். இனி மோகனின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான், அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டார் ஜெயலலிதா என்று கூறப்பட்ட நிலையில் சங்கராபுரம் தொகுதியில் மோகனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழரசி மாற்றம் ஏன்?
இதேபோல திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தமிழரசி, கே.என். நேருவிற்கு இவர் சரியான வேட்பாளராக இருக்கமாட்டார் என்று கூறப்பட்டதால் கிழக்குத் தொகுதிக்கு மாற்றப்பட்டார். இப்போது கிழக்கு தொகுதியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் தமிழரசி.

போலி டாக்டரா?
தமிழரசியும் அவரது கணவர் சுப்பையா பாண்டியனும் சித்தா, ஆயுர்வேதா மருத்துவர்கள் எனக் கூறிவருகிறார்கள். ஆனால், திருச்சி மாவட்ட இணை இயக்குனர் அலுவலகத்தில், போலி டாக்டர்கள் பட்டியலில் அவர்களின் பெயர் உள்ளதாக புகார் கூறப்பட்டது. இந்தநிலையில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழரசிக்கு பதிலாக வெல்லமண்டி நடராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் எத்தனை முறை மாற்றப்படுமோ?
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 22ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் இன்னும் எத்தனை முறை வேட்பாளர்கள் மாற்றப்படுவார்களோ என்று அதிமுக வட்டாரம் அலறிக்கிடக்கிறது.
விடுப்பா விடுப்பா அதிமுகன்ன வேட்பாளர்கள் மாறுவதும் அமைச்சர்கள் மாறுவதும் சகஜந்தானேப்பா!












Click it and Unblock the Notifications