நாடு சிறந்த தலைவரை இழந்துவிட்டது.. முப்தி முகமது சையது மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்
சென்னை: முப்தி முகமது சையதின் மறைவால் நாடு ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது. அவரது மறைவால் வாடும் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது உடல் நிலக்குறைவால் இன்று மரணமடைந்தார், அவருக்கு வயது 79. உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டிசம்பர் 24ம் தேதி சேர்க்கப்பட்டு, கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் முப்தி முகமது சயீது.

இந்நிலையில் அவரது உடல்நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. தொடர்ந்து உடல் நிலை மோசமான நிலையில், இன்று காலை முப்தி முகமது சயீது மரணமடைந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: முப்தி முகமது சையதின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட முப்தி, தனது வாழ்வை ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்காக அர்பணித்தவர்.
முப்தியின் மறைவால் நாடு ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது. அவரது மறைவால் வாடும் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications