மத்திய அரசிடம் வழங்கவுள்ள 2வது வெள்ள சேத அறிக்கை... அமைச்சர்களுடன் ஜெ. ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை. கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

இம்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் என்.எஸ். பழனியப்பன், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசிடம் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து 2-வது துணை அறிக்கையை அளிப்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே வெள்ள சேத பாதிப்புகள் குறித்து முதல் அறிக்கையை கடந்த மாதம் 26-ந்தேதி வெள்ள சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழுவிடம் முதல்வர் வழங்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.
அதேபோல், தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க நவம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் நிதி கோரி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications