கடமையைச் செய்.. பலன எதிர்பாராதே.. ஜெயலலிதா
சென்னை: ‘‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' என்கிறது பகவத் கீதை. அதாவது, ஒரு செயலை செய்து முடிப்பதற்கு முன் அதன் முடிவு எப்படி இருக்குமோ என்று அச்சப்படாமல், மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்பது தான் இதற்கு அர்த்தம். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கடமையை செய்; பலனாகிய வெற்றி தோல்வியை நினைக்காதே என்பது தான் இதன் பொருள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களையும், உயிரிழந்தவர்களின் உடலையும் மீட்பதற்கு, தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த 3,743 பேர் குழுவாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களின் பணியை பாராட்டி, அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இதுதொடர்பான விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதல்வர் ஆற்றிய உரை:
ஒற்றுமையே பலம்
கடந்த மாதம் 28-ந் தேதியன்று மாலை மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தவுடன் அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஆறு நாட்கள், இரவு, பகல் பாராமல், வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், உயிரை துச்சமென மதித்து, ‘‘ஒற்றுமையே பலம்'' என்பதற்கேற்ப ஈடுபட்டீர்கள்.
மலைப்பு - வியப்பு- அனாயசம்
மலைப்பாகவும், வியப்பாகவும் இருந்த மீட்புப் பணியை அனாயாசமாக செய்து முடித்துள்ளீர்கள். மொத்தம் 88 நபர்களை மீட்டெடுத்து இருக்கிறீர்கள். இதில், 27 நபர்களை நீங்கள் உயிருடன் மீட்டெடுத்து இருக்கிறீர்கள். எஞ்சியுள்ள 61 நபர்களின் உடல்களை மீட்டெடுத்து அவர்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளீர்கள்.
பகவத் கீதை சொல்வது என்ன...
‘‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' என்கிறது பகவத் கீதை. அதாவது, ஒரு செயலை செய்து முடிப்பதற்கு முன் அதன் முடிவு எப்படி இருக்குமோ என்று அச்சப்படாமல், மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்பது தான் இதற்கு அர்த்தம். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கடமையை செய்; பலனாகிய வெற்றி தோல்வியை நினைக்காதே என்பது தான் இதன் பொருள்.
கருமமே கண்ணாயினார்
இதற்கேற்ப நீங்கள் எல்லாம் மிகுந்த ஈடுபாட்டுடனும், பொறுமையுடனும், ‘‘கருமமே கண்ணாயினார்'' என்பதற்கேற்ப மீட்புப் பணியினை திறம்பட செய்து முடித்துள்ளீர்கள். கடினமான சூழ்நிலை மற்றும் மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நீங்கள் ஆற்றியுள்ள பணி மகத்தானது, செம்மையானது, சிறப்பானது.
பெற்றோரை பிள்ளைகள் காப்பாற்றுவது போல
எப்படி எவ்வித எதிர்பார்ப்புமின்றி குழந்தைகளை பெற்றோர் காப்பாற்றுகிறார்களோ, வயதான பெற்றோரை எப்படி பிள்ளைகள் காப்பாற்றுகிறார்களோ, அதே ஈடுபாட்டுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை நீங்கள் மீட்டெடுத்து இருக்கிறீர்கள்.
தொழிலே எண்ணம்
‘‘செய்யும் தொழிலே தெய்வம்'' என்பர். ஆனால், நீங்கள் எல்லாம் ஒரு படி மேலே சென்று ‘‘தொழிலே எண்ணம்'' என்று நினைத்து உழைத்தீர்கள். உங்களின் எண்ணம் ஈடேறியிருக்கிறது. நீங்கள் எல்லாம் பலனை எதிர்பாராமல் பணிகளைச் செய்தாலும், கண்ணும் கருத்துமாக கடமை ஆற்றியவர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவது எனது தலைமையிலான அரசின் கடமை.
நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்
அந்த வகையில், இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு அதிரடிப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தேசிய பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு ஊர்க்காவல் படை, மருத்துவத்துறை, நெடுஞ்சாலைகள் துறை, பொதுப் பணித்துறை, சென்னை மெட்ரோ ரெயில், சென்னை மாநகராட்சி நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மோப்ப நாய்களுக்கு நன்றி
பல்வேறு துறைகளைச் சார்ந்த 3,750 அலுவலர்கள் இந்த கடினமான பணியில் ஈடுபட்டனர். பல்வேறு அரசு துறைகள் இந்தப் பணியில் மிகுந்த ஒருங்கிணைப்புடனும், திறமையுடனும் செயல்பட்டு இருப்பது மெச்சுவதற்கு உரியது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய நபர்களை கண்டறிவதில் மோப்ப நாய்களும் திறம்பட பணியாற்றி இருக்கின்றன. மோப்ப நாய்களின் பயிற்சியாளர்களுக்கும் எனது பாராட்டுகள்.
எப்போதுமே எனது அரசு முன்னிலை
இன்னல்களைப் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்பவர்களை அங்கீகரிப்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் முன்னிலை வகிக்கிறது. இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட உங்களுக்கு நற்சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி கவுரவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் ஜெயலலிதா.
மெளன அஞ்சலி
விபத்தில் பலியான 61 பேரின் நினைவாக, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது விழாவில் கலந்துகொண்ட அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வரவேற்றார். வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நன்றி கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மேடையில் பரிசு
3,743 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழை வழங்குவதன் அடையாளமாக, 59 பேரை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு மேடையிலேயே முதல்வர் ஜெயலலிதா பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.