சொல்லியபடியே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் 'அம்மா'.. பட்ஜெட் உரை நடுவே ஓ.பி.எஸ் புகழாரம்
சென்னை: 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்.
முதலில் சுமார் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக, முதல்வர் ஜெயலலிதா பற்றி கவிதை வடிவில் புகழுரை வடித்தார் பன்னீர்செல்வம்.
இதன்பிறகு பட்ஜெட் உரையை படித்தார் ஓ.பி.எஸ். ஆனால் நடுவே சில நிமிடங்கள் முதல்வர் பற்றி புகழ தயங்கவில்லை அவர்.
அப்படி ஓ.பி.எஸ். நடுவே உதிர்த்த வார்த்தைகள் இதோ: திருவள்ளுவர் கூறியதை போலவே, சொல்லியதை சொல்லியபடி செய்பவர் அம்மா. சட்டசபை தேர்தலில் அம்மாவுக்கு மகத்தான ஆதரவு அளித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியளிக்க வாய்ப்பு தந்தனர் தமிழக மக்கள். அந்த தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்று அம்மா கூறினார்.
எனது நன்றிக்கடனை செயல் மூலம் காட்டுவேன் என்றும், தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவேன் என்றும், தேர்தல் வெற்றி செய்தி வந்ததுமே, அம்மா தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் பொருட்டு, 5 முக்கிய அரசாணைகளை வெளியிட்டு, தனது வாக்கை நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.