ஜெ.வின் தோழி பதர் சயீத் அதிமுகவில் இருந்து விலகல்!-ஆம் ஆத்மியில் இணைந்து போட்டி?!

இத்தகவலை ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு செய்தித் தொடர்பாளர் லெனின் வெளியிட்டுள்ளார்.
வழக்கறிஞரான பதர் சயீத், கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்த பதர் சயீத் பின்னர் மீண்டும் வக்பு வாரியத் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
மூத்த வழக்கறிஞரான பதர் சயீத் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக கடந்த 2005ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த முறை அதிமுக ஆட்சிக் காலத்தில் பதர் சயீத் வக்பு வாரியத் தலைவர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர், எஸ்.ஐ.இ.டி கல்லூரி இணைச் செயலாளர்ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, பதர்சயீத்துக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் விருப்பமனு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
பதர்சயீத், நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications