தீபாவின் குற்றச்சாட்டுகள் உண்மையா? தந்தி டிவியில் ஜெ. அண்ணன் மகன் தீபக் பரபர பேட்டி இன்று ஒளிபரப்பு!
பரபரப்புகளுக்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று காலை 6 மணிக்கு தந்தி டிவிக்கு பேட்டி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கின் பிரத்யேக பேட்டி இன்று காலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தந்தி டிவி அறிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் இருந்தார். அவருக்கு தீபக் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர். இதில் தீபா ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை நேரில் காண பல முறை முயற்சித்தார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போது, கடைசி வரை தீபாவுக்கு தனது அத்தையை காண முடியவில்லை. இருப்பினும் தீபக் அப்பல்லோ மருத்துவமனையிலேயே 70 நாட்களாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இவர்தான் மறைந்த ஜெயலலிதாவுக்கு அவரின் உடன்பிறவா தோழி சசிகலாவுடன் இறுதிச் சடங்குகளை செய்தவர்.
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவியை கைப்பற்றுவதில் சசிகலா தரப்பு தீவிர முயற்சி செய்து வருகிறது. முன்னணி தலைவர்கள் ஆதரவு கிடைத்த போதிலும், தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் ஒரு தரப்பினர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தான் ஜெயலலிதாவின் வாரிசு. அவர்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகம் அடிபடும் பெயர்களில் தீபாவின் பெயரும் ஒன்று. அவருக்கும் அதிமுக தொண்டர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
#ThanthiExclusive #Deepa-வின் குற்றச்சாட்டுகள் உண்மையா...? பதிலளிக்கிறார் #Jayalalithaa-வின் அண்ணன் மகன் #Deepak... நாளை காலை 6 மணி முதல்.. pic.twitter.com/7T9y9gxNFb
— thanthitv (@thanthitv) December 20, 2016
இந்த பரபரப்புக்கு இடையே தீபா தந்தி டிவிக்கு அளித்த பேட்டி நேற்று முன்தினம் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. அதில் அரசியலுக்கு தான் நிச்சயம் வருவதாக கூறியிருந்தார். இந்தநிலையில் தீபாவின் தம்பி தீபக் ஆரம்பத்தில் இருந்தே சசிகலா தரப்புடனே நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் தீபக் அளித்துள்ள சிறப்பு பேட்டி இன்று காலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தந்தி டிவி அறிவித்துள்ளது.