லேப்டாப்பில் சிரிக்கும் மக்கள் முதல்வர்: மாணவர்களுக்கு குழப்பம் வராதா?
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று முதல்வர் பதவியை பறிகொடுத்த பின்னரும் இன்னமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என்ற இமேஜை பதிவு செய்து வருகின்றனர் அமைச்சர் பெருமக்கள்.
முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் இன்னமும் பெயரளவுக்கு கூட முதல்வர் என்ற இமேஜை மக்கள் மனதில் ஏற்படுத்தவில்லை. அம்மா வழியில்தான் அவர் ஆட்சி செய்கிறார். அது அவர் ஸ்டைல் என்றால், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பைகள், இலவச லேப்டாப்களில் இன்னமும் ஜெயலலிதா படம்தான் பிரதானமாக இருக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளியில் நேற்று மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் ப.வளர்மதி வழங்கினார். லேப்டாப்களை வழங்கிய பின்னர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
அப்போது. அமைச்சர் வழங்கிய லேப்டாப்களுடன் மாணவியர் நின்றனர். அனைத்து லேப்டாப்பிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமே பிரதானமாக இடம்பெற்றிருந்தது.
இதை பார்த்த நமக்குத்தான் குழப்பமாக இருந்தது. முதல்வர் யார் என்பது பற்றி மக்களை இத்தனை குழப்புகின்றனரே, பள்ளி மாணவர்களுக்கு யார் முதல்வர் என்பதில் குழப்பம் வராதா?