5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளோம்.. கல்விக்கு முக்கியத்துவம்: சட்டசபையில் ஜெ.
சென்னை: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு சிறப்பாக மக்கள் பணியாற்றி வருவதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் மூன்றாம் நாளான இன்று முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் உரை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார்.

வெள்ளப் பாதிப்பு குறித்து உரிய விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னரும் எதிர்க்கட்சிகள் இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசி வருவதாக குறை கூறிய முதல்வர்,இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதால் மக்கள் இதை நம்பி விடுவார்கள் என எதிர்க்கட்சிகள் நினைப்பதாக தெரிவித்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பேசிய முதல்வர்,வெள்ளம் பாதித்த பகுதிகளில் 80,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்றும் குடிசைகளை இழந்த 2 313 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய முதல்வர்,சிறு,குறு வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 116 சதவீத நிதி அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 84 568 கோடி நிதி கல்விக்காக அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிறு,குறு வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 116 சதவீத நிதி அதிகமாகவே அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 84 568 கோடி நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசின் பல்வேறு முயற்சிகளால் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை கூறுவதோடு உயர் கல்வியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்பதை மிக பெருமிதத்துடன் தெரிவிதுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன, கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, எதிர்கால தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்பதற்கான வழியை உருவாக்கிடவும், கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, தமிழகத்தை தலைநிமிரச் செய்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம் என பிரகடனம் செய்து, இவற்றை நிறைவேற்ற செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பற்றி 2011ல் எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். அவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறி 5 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டார் ஜெயலலிதா.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி மற்றும் குறைந்த விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் வழங்கப்படுகிறது.
* 3 லட்சம் பேர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியில் 2,62,853 பேர்களுக்கு 5,159 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 37,147 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
* 12 லட்சத்து 8 ஆயிரம் பேர்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
* 60,000 பால் கறவை மாடுகள் விலையின்றி வழங்கப்படும் என அறிவித்ததில் 59,905 கறவைமாடுகள் 210 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளன.
* அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் விலையின்றி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கேற்ப 897 கோடி ரூபாய் செலவில் 6,95,000 குடும்பங்களுக்கு 27,80,000 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
* மீனவக் குடும்பங்களுக்கு மீன் தடைகாலத்தில் உதவித் தொகை 2,000 ரூபாயாக வழங்கப்படும், என்பதற்கேற்ப, இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. 7.78 லட்சம் மீனவர்களுக்கு 155 கோடியே 56 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* மீன் குறைவு காலங்களில் 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு 7.57 லட்சம் மீனவர்களுக்கு 368 கோடியே 63 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடல்மீனவர் குடும்பங்கள் மற்றும் கடல் மீனவ மகளிருக்கு 2,700 ரூபாய் வீதம் 246 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* தாய்மார்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 கோடியே 63 லட்சம் குடும்பங்களுக்கு 6,553 கோடி ரூபாய் செலவில் இவை வழங்கப்பட்டுள்ளன.
* பணிபுரியும் மகளிருக்கு 6 மாத மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 12,000 ரூபாய் வழங்கும் மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 31 லட்சத்து 19 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு 2,910 கோடியே 21லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
* திருமண உதவித் தொகையாக 50,000 ரூபாய் வரைநிதி உதவியும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், செயல்படுத்தப்படுகிறது. 7 லட்சத்து 72 ஆயிரத்து 643 பெண்களுக்கு 2,537 கோடியே 74 லட்சம் ரூபாய் நிதியுதவியும் 2,844 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
* முதியோர் உதவித் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 30 லட்சத்து 51 ஆயிரத்து 454 பேர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
* பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படும், என்ற அறிவிப்பின் படி 32 லட்சத்து 67 ஆயிரத்து 311 மாணாக்கர்களுக்கு 5,612 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் மடிக்கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன.
* மாணாக்கர்கள் தங்கும் விடுதிகளில் உணவுக் கட்டணம் கூடுதலாக வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி பள்ளி விடுதிகளில் தங்கிப் பயில்வோருக்கு மாதமொன்றிற்கு உணவுக் கட்டணம் 450 ரூபாயிலிருந்து 755 ரூபாயாகவும்; கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயில்வோருக்கு மாதமொன்றிற்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் 550 ரூபாயிலிருந்து 875 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
* முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் அனைத்து விலையில்லா திட்டங்களும் நீட்டிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
* தேர்தல் வாக்குறுதியின்படி திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் சீன மற்றும் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
* மாதம் 70 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது.
* 10ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு சாதிச் சான்றிதழ் பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது.
* உழவர் பாதுகாப்புத் திட்டம் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 37 லட்சத்து 19 ஆயிரம் பேர் 3,018 கோடியே 90 லட்சம் ரூபாய் அளவிற்கு பயன் பெற்றுள்ளனர்.
* கூடுதல் நவீன பேருந்துகள் இயக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. 1,480 புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 6,559 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
* பள்ளி மாணவ, மாணவியருக்கு 1,057 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 31 லட்சத்து 71 ஆயிரத்து 764 மிதிவண்டிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
* விவசாயம், கால்நடை, மீன்வளம், நெடுஞ்சாலைகள், கல்வி, சுகாதாரம், மின்சாரம், தொழில் துறை என ஒவ்வொரு துறையிலும் கொடுத்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன, என்பதைப் பற்றி நான் ஏற்கெனவே எனது பதிலுரையில் தெரிவித்துள்ளேன்.
* நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதற்கு மேலும் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல், பிற நாடுகளும் செயல்படுத்த விழையும் அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள், பண்ணை பசுமை காய்கறி விற்பனை நிலையங்கள் என பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.
* மேலும், மக்களை நாடி சேவை புரியும் அம்மா திட்டம், 24 மணி நேரம் செயல்படும் அம்மா சேவை மையம் போன்ற திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். 8,542 கோயில்களில் கும்பாபிஷேகம்நடத்தப்பட்டுள்ளது. 724 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தினந்தோறும் 56,728 பேர் பயனடைந்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அருள்மிகு பழனி தண்டாயுத பாணி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* தமிழர் நலன் காத்த பெரியோர்களின் நினைவினைப் போற்றும் வகையில், பென்னிகுவிக், கரிகால்சோழன், வேலுநாச்சியார், தியாகி சங்கரலிங்கனார், மார்ஷல்நேசமணி, தியாகி வாஞ்சிநாதன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், விடுதலைப் போராட்டவீரர் கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, வீரபாண்டிய கட்டபொம்மன், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம் ஆகியோருக்கு மணிமண்டபங்கள், தீரன் சின்னமலை மற்றும் வீரத்தாய் குயிலி ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார் ஜெயலலிதா












Click it and Unblock the Notifications