நீங்கள் கற்பனை செய்ய முடியாத உன்னதமான திட்டங்களை செயல்படுத்துவேன்!- ஜெயலலிதா
வேலூர்: தேர்தல் அறிக்கையிலே சொல்லியிருப்பது மட்டுமல்ல, நீங்களே எதிர்பார்க்க முடியாத; கற்பனை செய்து பார்க்க முடியாத, இன்னும் இன்னும் உன்னதமான திட்டங்களை நான் கொண்டு வந்து உங்களுக்காக செயல்படுத்துவேன், என்றார் முதல்வர் ஜெயலலிதா.
வேலூரில் நேற்று அவர் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தபோது பேசுகையில், "நானும் எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு எப்போதும் இருப்பது ஏழைகளின் பக்கம்தான். அதனால்தான் இப்படி ஒரு தேர்தல் அறிக்கையைத் தந்துள்ளேன். அந்த அறிக்கையைப் பார்த்து பயந்து திமுக உள்ளிட்ட கட்சிகள் குறை கூறி வருகின்றன.
எனவே, ஏழை எளியோருக்கான திட்டங்களாக, அவர்களை வாழ்வில் கை தூக்கி விடும் திட்டங்களாக, அவர்களும் தங்கள் சொந்தக் கால்களிலே நின்று வருவாய் ஈட்டும் திட்டங்களாக, எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் அமைந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம், எனக்கென்று குடும்பம் இல்லை. எனக்கு எந்தவித சுயநலமும் இல்லை.
இலவச வண்ண தொலைகாட்சி பெட்டியைக் கொடுத்து பல ஆயிரம் கோடி ரூபாய் கேபிள் டி.வி. கட்டணமாக அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனவேதான், எங்களது தேர்தல் அறிக்கையில் மக்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க.வினர், பா.ம.க., மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் என பலரும் என் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை இதுநாள் வரை சொல்லிவந்தனர். எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் மீதும், குறைகள் சொல்வதோடு மட்டுமல்லாமல், குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். தற்போது அதையெல்லாம் நிறுத்திவிட்டு எங்களது தேர்தல் அறிக்கையை பற்றி மட்டுமே பேசி வருகின்றனர்.
இதில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற இயலாதவை என இவர்கள் எல்லோரும் தெரிவித்து வருகின்றனர். 'ஜெயலலிதா மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இந்த அம்மையார் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது. அந்த அம்மாவை நம்பி ஏமாந்து போகாதீர்கள்' என்று திரும்பத் திரும்பக் கூக்குரல் இடுகின்றனர்.
எந்த ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்னாலும், அதைப்பற்றி 100 தடவை அல்ல, ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி தருபவள்தான் இந்த ஜெயலலிதா. என்னால் நிறைவேற்ற முடியும் என்றால்தான் நான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.
கற்பனை செய்ய முடியாத திட்டங்கள் உண்டு
எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறேன். மக்கள் நலனுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள், உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் தான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் விரோத செயல்களின் உச்சத்திற்கே சென்று இந்த தேர்தல் அறிக்கையை தடைசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திற்கே தி.மு.க. சென்றுள்ளது. இவர்கள் தான் மக்களின் எதிரிகள். அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
இப்போது இந்தத் தேர்தலையொட்டி 2016-ல் நான் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏராளமான அறிவிப்புகள் இருந்தாலும், வாக்குறுதிகள் இருந்தாலும், இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். ஒரு தாய்க்குத் தான் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்; எப்போது செய்ய வேண்டும்; அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும்.
எனவே, இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். நீங்களே எதிர்பார்க்க முடியாத; நீங்களே கற்பனை செய்து பார்க்க முடியாத, இன்னும் சிறந்த திட்டங்களை, இன்னும் உன்னதமான திட்டங்களை நான் கொண்டு வந்து உங்களுக்காக செயல்படுத்துவேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறேன்.












Click it and Unblock the Notifications