சேலம் பிரசார கூட்டத்திலும் 'திடீர் உடல்நலக் குறைவால் 2 தொண்டர்கள் பலி'- சொல்வது ஜெ.
சென்னை: சேலம் பிரசார கூட்டத்தில் வெயிலின் உக்கிரம் தாங்காமல் 2 அதிமுகவினர் நேற்று பலியாகினர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ 2 அதிமுக தொண்டர்களும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் விருதாசலம் பொதுக்கூட்டம் உச்சி வெயிலில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 2 அதிமுகவினர் வெயிலின் கோரத்தாண்டவத்துக்கு பலியாகினர். ஆனால் அப்போதும் உடல்நலக் குறைவால் 2 அதிமுக தொண்டர்கள் பலியானதாக கூறியிருந்தார் ஜெயலலிதா.

தற்போது சேலம் மகுடஞ்சாவடி பொதுக்கூட்டத்திலும் வெயிலின் கொடுமைக்கு 2 அதிமுகவினர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
வருகிற மே 16-ந்தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று (20-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த, கங்கவல்லி ஒன்றியம், கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, மகுடஞ்சாவடி ஒன்றியம், கூத்தாண்டிபாளையத்தைச் சேர்ந்த பச்சியண்ணன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனத்துயரம் அடைந்தேன்.
எனதருமைக் கழக உடன் பிறப்புகளான பெரியசாமி, பச்சியண்ணன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தற்போது சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேர்தல் முடிந்த பிறகு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலிலதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications