சிறை தண்டனையை எதிர்த்து ஜெ. அப்பீல்: விசாரணை நிறைவு- தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இன்று நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார் கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி
சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கின் 41 நாளான இன்று வழக்கின் சூத்திரதாரியான சுப்ரமணியசாமி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்தார்.
இன்றுடன் விசாரணையை முடித்துக்கொள்ளவதாக கூறிய நீதிபதி குமாரசாமி தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து 41வது நாளாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது

சொத்துக்குவிப்பு வழக்கு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

பரப்பன அக்ரஹாரா சிறை
இதனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி விடுதலையாகினர். அதே நேரத்தில் ஜெயலலிதா 10 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது.

உயர்நீதிமன்றத்தில் அப்பீல்
சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

41 நாட்கள் வாதம்
இதனையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் மேல்முறையீட்டு விசாரணை கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கியது. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலா வழக்கறிஞர் பசந்தும் தலா 9 நாட்களும், சுதாகரன், இளவரசி வழக்கறிஞர் சுதந்திரம் 8 நாட்களும், கம்பெனி வழக்குகள் 2 நாட்களும் நடந்தது. அத்துடன் நால்வர் தரப்பு இறுதி வாதம் நிறைவு பெற்றது.

அரசு தரப்பு வாதம்
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடந்த மார்ச் 6ஆம் தேதியோடு தன் வாதத்தை நிறைவு செய்தார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் திங்கட்கிழமை நிறுவனங்கள் எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார்.

எழுத்து பூர்வ வாதம்
இந்த நிலையில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று கூடியதும் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பில் 171 பக்கங்கள் கொண்ட எழுத்துபூர்வமான வாதமும் மற்றும் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள், வரவு-செலவுகள், கட்டுமான பணிகளுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்து 65 பக்க ஆவணங்கள் அடங்கிய வாதமும் தாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரமணியசாமி தரப்பு
41 வது நாளான இன்று வழக்கின் சூத்திரதாரியான சுப்ரமணியசாமி 14 பக்கங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வமான வாதத்தை இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

உறுதி செய்க
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது சிறப்பு நீதிமன்றத்தில் நிருபணமாகியுள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும் என்று சாமி தனது தரப்பு வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தப்பித்து விடக்கூடாது
சட்டவிரோதமாக சொத்து சேர்த்துவிட்டு வருமானவரி கட்டி தப்பிவிடக்கூடாது என்றும் சாமி குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணியசாமி தரப்பு வாதத்திற்கு பதில் தர ஜெயலலிதா, அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி குமாரசாமி விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்

தீர்ப்பு ஒத்திவைப்பு
பிற்பகல் நீதிமன்றம் கூடியதும் தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் நீதிபதி குமாரசாமி ஒத்திவைத்தார். 41 நாட்கள் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்றுடன்(புதன்கிழமை) முடிவடைந்தது. நீதிபதி குமாரசாமி இன்று தீர்ப்பு தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி குமாரசாமி அளிக்கும் தீர்ப்பினை பொறுத்தே ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications