தேர்தல் தோல்வி எதிரொலி... தமிழக அமைச்சரவையில் மூவர் டிஸ்மிஸ் - 3 பேர் மீண்டும் சேர்ப்பு!
சென்னை: தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பச்சைமால், ரமணா, தாமோதரன் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கோகுல இந்திரா, வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றாலும் தேர்தல் பணியில் புகாருக்குள்ளானோர் மீது நடவடிக்கை பாய்ந்து வருகிறது.

இந்நிலையில் அமைச்சரவையிலும் அதிரடி மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
மூவர் டிஸ்மிஸ்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால், வருவாய்த்துறை அமைச்சர் ரமணா மற்றும் வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர்களான கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.,
புதிய அமைச்சர்கள்
புதிய வேளாண் அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி,
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி,
கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சராக கோகுல இந்திரா நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்
மேலும் நகராட்சி, ஊரக வளர்ச்சி அமைச்சரான கே.பி. முனுசாமிக்கு தற்போது தொழிலாளர் நலத்துறை,
விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சராக இருந்த உதயகுமாருக்கு வருவாய்த்துறை,
கைத்தறித்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுந்தரராஜுக்கு விளையாட்டு இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளை பதவியேற்பு
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் நாளை மாலை பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.
டிஸ்மிஸ் ஏன்?
கன்னியாகுமரி எம்.எல்.ஏ. கே.டி.பச்சைமால். அங்கு லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பொன்.ராதாகிருஷ்ணன் வென்றுள்ளார். அதனால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் லோக்சபா தேர்தல் வேலை செய்யாததால் அங்கு மாவட்டச் செயலர் நீக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ ரமணா அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications