சகாயம், மு.க.அழகிரி் பெயரை உச்சரிக்காமலே மதுரையில் பேசிய ஜெயலலிதா !
மதுரை: மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் கிரானைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா ஐ.ஏ.எஸ். அதிகாரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பெயரை உச்சரிக்காமலே விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது மதுரையில் இதே இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போதைய திமுக தென் மண்டல அமைப்பாளராக இருந்த மு.க.அழகிரியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அதேபோல் 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும் மதுரையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அழகிரி பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறினார்.

இந்நிலையில் மதுரையில் நேற்று நடந்த அ.தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அழகிரி பெயரை குறிப்பிட்டு நேரடியாக விமர்சனம் செய்வதை தவிர்த்து விட்டார்.
மேலும், மதுரை மாவட்டத்தில் கிரானைட் கடத்தலின் மூலம் அரசுக்கு 16,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. கிரானைட் கொள்ளையில் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை. கிரானைட் கொள்ளை பற்றி தகவல் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி. கிரானைட் கொள்ளையைப் பற்றி செய்தி வெளியிட்டவரை சிறையில் அடைத்தனர்..
திமுக ஆட்சியில் இருக்கும்வரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்தான் கிரானைட் கொள்ளை பற்றி ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. 2012ம் ஆண்டு கிரானைட் கொள்ளை மூலம் ரூ. 16, 000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் கிரானைட் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட சட்ட ஆணையர் ஆய்வு நடத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில், கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நிறுவனங்களில் ஒலிம்பஸ் என்ற நிறுவனமும் ஒன்று. அந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் குடும்பத்திற்கு சொந்தமானது. அப்படி இருக்கும் போது கருணாநிதி எப்படி நடவடிக்கை எடுப்பார்?
கிரானைட் கொள்ளையில் ஒரு லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது இதற்கும் திமுகவினர்தான் காரணம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரியில் ஊழல் செய்தவர்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணி என்றார். இவ்வாறு பேசிய ஜெயலலிதா ஒரு இடத்தில் கூட விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பற்றி குறிப்பிடவே இல்லை. பொத்தாம் பொதுவாக மாவட்ட ஆட்சியர் என்றே தனது உரை முழுவதும் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கும்பகோணம் தொகுதி வேட்பாளர் ரத்னா உள்ளிட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 47 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications