ஜெயலலிதா, ரோசய்யா, விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து!
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கூறியுள்ளதாவது:
"மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.
இந்த நன்னாளில் மக்கள், மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த தீப ஒளித் திருநாளில், மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்
கவர்னர் வாழ்த்து
தமிழக ஆளுநர் ரோசையா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த தீப ஒளி திருநாள், மக்களின் இதயங்களில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தி, அமைதியையும் வளர்ச்சியையும் வளத்தையும் கொடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன்
பேதங்களை மறந்து, பிணக்குகளைத் துறந்து எல்லோரும் எல்லாம் பெற்று இனிதே வாழ வாழ்த்துவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் வாழ்த்து
இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
தீபாவளி திருநாள் மக்கள் அனைவராலும் மகிழ்ச்சியோடு கொண்டாடக்கூடிய ஒரு நன்னாள் ஆகும். இருளை நீக்கி, ஒளியை ஏற்றும் நாளாக தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதின் நோக்கமாகும். தீமைகளை அழித்து நன்மைகளை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் மக்களின் நல்வாழ்விற்கு அடிகோள்வது இந்நாளில் கடைபிடிக்கும் கொள்கையாகும்.
உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக செலவினங்கள் அன்றாட குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்படுகின்றனர். செலவை சரிக்கட்ட கூடுதலாக வருமானம் பெற வழிகளும் இல்லை. ஆகவே, செலவை சுருக்கியும், கடனை வாங்கியும் இத்தகைய விழாக்களை கொண்டாட வேண்டியுள்ளது. விலைவாசிகள் ஒரே சீராக பல ஆண்டுகள் தொடருமானால் இத்தகைய வேதனைகளுக்கு இடம் இராது. ஆனால் விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவு உயர்கின்றது.
இவை போதாதென்று மாநில, மத்திய அரசுகள் விலைவாசிகளை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக அதிகரிக்கும் வகையிலேயே அவர்களது ஆட்சி முறை உள்ளது.
இத்தகைய சூழ்நிலை இருப்பினும், வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளியை கொண்டாடாமல் இருக்க முடியாது. குடும்பத்தோடு இந்த தீபாவளியை ஏழை, எளிய மக்களும் தங்களது சக்திக்கேற்ற வகையில் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
இந்த நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும், தங்கள் குடும்பத்தோடும், சுற்றத்தாரோடும் தீபாவளியை கொண்டாட தேமுதிக சார்பில் இதயமார்ந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்.