பாலில் கூட ஊழல் செய்த மாநிலம் தமிழகம்: அமித்ஷா கிண்டல்
நாகர்கோவில்: திராவிட கட்சிகள் ஊழலைத் தவிர, வேறு எந்த ஒரு விஷயத்தையும் தமிழகத்தில் செய்யவில்லை. பாலில் ஊழல் செய்ய முடியும் என்று நிரூபித்த மாநிலம் தமிழகம்தான். மணல் கொள்ளை மூலம் இந்த அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளது என்று அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
பாஜக அகில இந்தியத் தலைவரான அமித்ஷா தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பட்டுக்கோட்டை, தென்காசி, நாகர்கோவிலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த அமித்ஷா, தமிழகம் இன்று 2016ம் ஆண்டு தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வளர்ச்சிக்கான அரசு வேண்டுமா? அல்லது திமுக, அதிமுக போன்ற ஊழல் நிறைந்த அரசுகள் வேண்டுமா? என்று வாக்காளர்கள் யோசித்துப் பார்த்து, முடிவு செய்ய வேண்டிய தேர்தல் இது.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்களித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, தமிழக மக்கள் இந்தத் தேர்தலில் மாற்றத்துக்கான ஒரு அரசாங்கத்தை, வளர்ச்சிக்கான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தை சுரண்டுவதிலும், ஊழல் செய்வதிலும் திராவிட கட்சிகளிடையே எந்த ஒரு வேறுபாடும் இல்லை. திமுக, அதிமுக என்ற வேறுபாடு மட்டுமே உள்ளது. எனவே, மாற்றத்தைக் காண பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். அந்த மாற்றம் தமிழகத்தில் இருந்தே தொடங்கிடவேண்டும்.
மீண்டும் மீண்டும் திமுக, அதிமுக என்று திராவிட கட்சிகளைத் தேர்ந்தெடுக்காமல், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தமிழகம் இன்றைக்கு வறட்சியைக் காண்கிறது. ஆனால், ஊழலில் செழிப்பாக உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு ஊழல் கூட்டணி. திமுக மீது 2ஜி, ஏர்செல் மேக்சிஸ் என்று நிறைய ஊழல்கள் உள்ளன. காங்கிரஸ் பற்றி சொல்லவே வேண்டாம். அதுதான் ஊழலின் ஊற்றுகண். அதிமுக தலைவி மீது சொத்துக்குவிப்பு வழக்குள்ளது. இதற்காக அவர் சிறையும் சென்றுவந்துள்ளார்.
திராவிட கட்சிகள் ஊழலைத் தவிர, வேறு எந்த ஒரு விஷயத்தையும் தமிழகத்தில் செய்யவில்லை. பாலில் ஊழல் செய்ய முடியும் என்று நிரூபித்த மாநிலம் தமிழகம்தான். மணல் கொள்ளை மூலம் இந்த அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளது.
தமிழகம் கடந்த 50 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிள்ளைக்கு இந்த மாவட்டம் என்று பிரித்து, பிள்ளைக்கொரு மாவட்டம் கொடுத்து ஊழல் செய்து கொண்டிருக்கிறது திமுக. மத்தியில் மோடி தலைமையிலான இரண்டு ஆண்டுகால ஆட்சியில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவார்கள் மற்றும் தாக்குவார்கள். ஆனால், தமிழக மீனவர்களை துப்பாக்கி சூட்டில் இருந்து மோடியின் அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இது மோடி அரசின் சாதனையாகும்.
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி இரண்டாயிரம் கோடி நிவாரணம் வழங்கினார். இதை வாங்கி, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளாமல் ஆளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்று செக்போட்டுக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். மத்திய அரசு கிலோ 27 ரூபாய்க்கு வழங்கும் அரிசியை வாங்கி, தமிழக அரசு கிலோ 2 ரூபாய்க்கு கொடுக்கிறது. இதை அம்மா அரிசி என்கின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த முத்ரா திட்டம், இன்சூரன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக உதய் மின் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், தமிழக மின்வாரியத்தின் நஷ்டம், கடன் சுமை குறையும்.
சுதந்திரத்துக்குப் பின்னர் வேகமான வளர்ச்சி கண்ட தமிழகம், இன்று திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியால் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. மீண்டும் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறுவதற்கு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications