நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் கட்சிப் பதவி வழங்கினார் ஜெயலலிதா
சென்னை: அதிமுக அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் கட்சி நிர்வாகிகளை மாற்றியும், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திமுகவின் பெரியசாமியிடம் தோல்வியடைந்தார். மேலும், அவர் ஏற்கெனவே போட்டியிட்ட நத்தம் தொகுதியிலும் அதிமுக தோல்வியடைந்தது.
இதையடுத்து நத்தம் விஸ்வநாதனிடமிருந்த திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் நத்தம் தொகுதி செயலராக இருந்த அவரது மருமகன் கண்ணன் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் கட்சிப் பதவி வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,
''அதிமுக அமைப்புச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைப்புச் செயலாளர்களாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணியும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications