ஜெயலலிதா பற்றி வதந்தி: தி.மு.க.வினரின் சமூக வலைதளங்களை முடக்குவதாக டி.ஜி.பி.யிடம் புகார்
சென்னை: எவ்வித முகாந்திரமும் இல்லாமலும், தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்களின் வலைதள கணக்குகளை முடக்குவதோ, அச்சுறுத்துவதோ அல்லது அவர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை மேற்கொள்வதோ தவிர்க்கப்பட வேண்டும் என்று தி.மு. கழக சட்டத்துறை சார்பாக காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு டி.ஜி.பி., சென்னை நகர கமிஷனர், சைபர் கிரைம் துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரிடம் தி.மு.க. சட்டத் துறை செயலாளர் இரா.கிரிராஜன் கொடுத்துள்ள மனு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பல்வேறு நபர்கள் சமூக வலைதளத்தில் முதல்வரின் உடல் நிலை குறித்து தவறாக வதந்திகள் பரப்பி வருவதாக அவர்கள் மீது காவல்துறை சைபர் கிரைம் பிரிவு நடவடிக்கை மேற் கொண்டு சிலரை கைது செய்தும் உள்ளது.

திட்டமிட்டு தீய நோக்கத் தோடு வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் இந்த நடவடிக்கையின் பெயரால் காவல்துறையின் சைபர் பிரிவினர் தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்களின் முகநூல் கணக்கையும், அவர்களின் வலைதள செயல்பாட்டையும் முடக்கியது மட்டுமல்லாமல், ஒருசிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கி, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அச்சுறுத்தி அனுப்பியுள்ளார்கள்.
சைபர் கிரைம் பிரிவினர் குறிப்பாக திமுகவைச் சேர்ந்தவர்களின் வலை தளங்களை பின்தொடர்ந்து அவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என்று மிரட்டி வருவதாக தி.மு.க. தலைமைக்கு புகார் வந்த வண்ணம் உள்ளன.
எனவே இதுகுறித்து தாங்கள் உரிய விசாரணை இன்றியும்-எவ்வித முகாந்திரமும் இல்லாமலும், தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்களின் வலைதள கணக்குகளை முடக்குவதோ, அச்சுறுத்துவதோ அல்லது அவர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை மேற்கொள்வதோ தவிர்க்கப்பட வேண்டும் என்று திமுக சட்டத்துறை சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications