மதுவிலக்கு பற்றி பேச ஜெயலலிதாவிற்கு தகுதி இல்லை: ஸ்டாலின் தாக்கு
நாகர்கோவில்: தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜெயலலிதா பொய்களை மட்டுமே பேசி வருவதாகவும், மதுவிலக்கு பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மதுக்கடைகளைத் திறந்த ஜெயலலிதாவிற்கு "மதுக்கடைகளை மூடுவோம்" என்று கூறும் தி.மு.க.வின் வாக்குறுதியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.
மதுக்கடைகள் தொடர்பான விதிமுறைகளில் கட்டுப்பாடு செய்தவர் கருணாநிதி. ஏற்கனவே, மதுவிலக்கை அமல்படுத்தியும் உள்ளார். அது 1974ல் நடந்தது, 1300 பார்களையும், 128 டாஸ்மாக் கடைகளையும் முதல் கட்டமாக மூடியவர் கருணாநிதி.
அதேபோல் மதுக்கடைகளின் விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்படும் என்று உத்தரவு போட்டவர் கருணாநிதி என்று கூறிய ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகே, மதுவிலக்கு தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட்டதோடு, ஏகபோக அனுமதி அளிக்கப்பட்டது.
20.5.1983 அன்று இன்று மது விற்கும்"டாஸ்மாக்" நிறுவனம் துவங்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சி. தமிழகத்தில் மதுவிலக்கு தொடர்பான 20 சட்டங்களும், விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டன. இதில் மதுவை விற்கும் 15 சட்டங்களை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி. மது உற்பத்தி செய்ய "மிடாஸ்" கம்பெனியை திறந்தவர் ஜெயலலிதா.
இன்றைக்கு மது விலக்கு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்றும் வாக்குறுதி அளிக்கிறார். திராணி இருந்தால் இதுபற்றி என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க ஜெயலலிதா முன்வரட்டும்.
கடந்த 5 ஆண்டுகாலமாக ஆட்சி நடத்திய ஜெயலலிதா மதுவிலக்கை அமல்படுத்தாமல் ஏமாற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு எனக் கூறி மக்களை மோசடி செய்ய நினைக்கிறார். அதற்கான தகுதியை அவர் எப்போதோ இழந்துவிட்டார்.
காந்தியவாதி சசிபொருமாள் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததால் அதிமுக தலைமைக்கு ஏற்பட்ட கோபத்தின் எதிரொலியாகத்தான் அவரது மரணத்தை தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.