அதிமுகவினருக்கு கலகல தீபாவளியா? கருப்பு தீபாவளியா? வெள்ளிக்கிழமை தெரியும்
சென்னை: அம்மாவே ஜெயிலுக்கு போயிட்டாங்க... இனி இது எதுக்கு என்று கரு கருவென சுருள் சுருளாக இருந்த தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டார் அதிமுக தொண்டர் ஒருவர்.
அம்மாவுக்காக விசுவாசம் மிக்க தொண்டர்கள் மட்டுமல்லாது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கணக்கு காண்பிக்க என்று ஆயிரக்கணக்கில் தொண்டர்களின் தலையை மொட்டையடிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா செப்டம்பர் 27ஆம் தேதி முதல் பெங்களூர் சிறையில் உள்ளார். அன்றைய தினம் முதல் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அதிமுகவினர் துக்கம் அனுஷ்டித்து வருகின்றனர்.
வெள்ளை வேட்டி சட்டையுடன் வலம் வந்த அதிமுகவினர் பெரும்பாலோனோர் கருப்பு சட்டை அணிந்து கவலையோடு இருக்கின்றனர். இப்போது கறியும் சாப்பிடாமல் விரதம் இருக்கின்றனராம்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. மகிழ்ச்சியோடு புத்தாடை, பட்டாசு, பலகாரம் என பலரும் வாங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதிமுகவினர் ஒவ்வொரு செயலும், வேண்டுதல்களும் அம்மாவுக்கு ஜாமீன் கிடைக்கவேண்டுமே என்பதாகத்தான் இருக்கிறது.
வெள்ளிக்கிழமை
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை மனு விசாரணைக்கு வர உள்ளது.
கிடைத்தால் வெள்ளை
ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா என்று பந்தையமே கட்டி வருகின்றனர் பலரும். அம்மா வெளியில் வந்தால்தான் கருப்பு சட்டையை கழற்றி விட்டு வெள்ளைச்சட்டைக்கு மாறுவார்கள் அதிமுக தொண்டர்கள்.
கறுப்பு தீபாவளி
ஒருவேளை அன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காவிட்டால் அவர்கள் கறுப்பு தீபாவளிதான் அனுஷ்டிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
பட்டாசு வெடிப்பது எப்படி?
தீபாவளியின் முக்கிய அம்சமே பட்டாசும், பலகாரமும், கறிசோறும்தான். ஆனால் அம்மாவே ஜெயிலில் இருக்கும் போது பட்டாசு வெடித்து கறி சோறு சாப்பிடுவது எப்படி என்று யோசிக்கின்றனர் அதிமுகவினர்.
ஐப்பசி அமோகமாக இருக்குமா?
புரட்டாசி மாசம்தான் அம்மா வாழ்க்கையில புரட்டி போட்டுருச்சு... பிறக்கப்போகும் ஐப்பசி மாதமாவது அம்மாவுக்கு அமோகமாக இருக்கவேண்டும் என்பதுதான் அதிமுகவினரின் இப்போதய வேண்டுதலாக இருக்கிறது.