அப்பல்லோ ஐசியுவில் 57வதுநாளாக ஜெ.,.... டிஸ்சார்ஜ் செய்ய தேதி குறித்த கேரள ஜோதிடர்
உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 57 நாட்கள் கடந்து விட்டது. புகைப்படமோ, வாட்ஸ்அப்பில் குரலோ எதுவுமே இதுவரை வெளியாகவில்லை.
சென்னை: செப்டம்பர் 22ம் தேதி இரவில் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு போய் அட்மிட் செய்தது போல மீடியாக்களுக்கு தெரியாமல் இரவில் தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ஜெயலலிதா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவை என்றைக்கு எப்போது டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று கேரளா ஜோதிடர் ஒருவர் தேதி குறித்து கொடுத்திருக்கிறாராம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனதில் இருந்தே அமைச்சர்கள், அதிகாரிகள் தொண்டர்கள் என அனைவரும் அப்பல்லோவில் குவிந்தனர். இடைத்தேர்தல் அறிவிக்கப்படவே அவரவர் தொகுதிகளைப் பார்க்க பறந்து விட்டனர். பிரச்சாரத்தை முடித்து விட்டு சென்னைக்கு பறந்து வந்து ரிப்போர்ட் செய்து விட்டு போகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஜெயலலிதா முகமோ, குரலோ காட்டாத இடைத்தேர்தலை அதிமுக சந்திக்க உள்ளது. வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடி நிலையில் தேர்தலை சந்திக்கிறது அதிமுக. ஜெயலலிதாவின் கையெழுத்துடனான முதல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை இருவரைத் தவிர முக்கிய நிர்வாகிகள் யாரும் அப்பல்லோவிற்கு வருவதில்லை. அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல்பணியாற்றி வருகின்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் தஞ்சாவூர் தொகுதிக்கு போனாலுமேகூட இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு வந்து செல்கிறார். இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் தொகுதிகளில் இருந்து அமைச்சர்கள் கிளம்பிவிடுவார்கள். மீண்டும் அப்பல்லோவிற்கு வரும் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
57 நாளாக ஜெயலலிதா
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 57 நாட்கள் ஆகிவிட்டது. மூச்சு விடுகிறார், டெலிபோனில் பேசுகிறார், டிவி பார்க்கிறார் போன்ற செய்திகள் கசியவிடப்படுகின்றன. விரைவில் சிறப்பு வார்டுக்கு மாறுவார் என்றும் கூறப்படுகிறது. இரவோடு இரவாக அவர் போயஸ்கார்டனுக்கு அழைத்து வரப்படுவார் என்ற செய்தி வெளியானதால் அப்பல்லோ வாசலில் தூக்கத்தை தொலைந்து அலைந்தனர் ஊடகத்தினர்.
தேதி குறித்த ஜோதிடர்
ஜெயலலிதாவை எப்போது வேறு அறைக்கு மாற்றுவது என்றும், மருத்துவமனையில் இருந்து எந்த நாளில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்றும் கேரளா ஜோதிடர் ஒருவர் அப்பல்லோவிற்கே நேரில் வந்து தேதியும், நேரமும் குறித்து கொடுத்திருக்கிறார். புரட்டாசியில் போன ஜெயலலிதா கார்த்திகையில் நல்ல நாளில் வீடு திரும்புவார் என்று மட்டும் அதிமுக வட்டாரங்களில் தகவல்கள் அலையடிக்கின்றன.
அதிமுகவினர் கொண்டாட்டம்
ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகி வருவதால் அதிமுகவினர் இப்போதே நேர்த்திக்கடனை செலுத்த ஆரம்பித்து விட்டனர். மொட்டை போடுவது, தேங்காய் உடைப்பது என மீண்டும் அதிமுகவினர் ஆரம்பித்து விட்டனர்.