ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டி பரபரப்பை பற்ற வைக்குமா?
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பிரத்யேக பேட்டி தந்தி டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் பல கேள்விகளை முன் வைத்து தந்தி டிவி பேட்டி கண்டுள்ளது. இந்த பேட்டி சனி, ஞாயிறு ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென ரத்தானது.
இந்த நிலையில் இந்த பேட்டி தற்போது ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு செவ்வாய்கிழமையன்று பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது.

தீபா என்ற பெயர் இப்போது ஊடக வெளிச்சத்தில் அடிபடும் பெயராக உள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள்தான் தீபா. பிறந்தது முதல் போயஸ்கார்டனில் வேதா நிலையத்தில் ஜெயலலிதாவின் நிழலில் வளர்ந்த தீபா, இப்போது போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சொந்த அத்தை ஜெயலலிதாவின் மரணத்திற்கு கூட அருகில் இருந்து அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க சென்ற போது விரட்டப்பட்டார். இதன் காரணமாக ஊடகத்திடம் தனது நிலையை வெளிப்படுத்தினார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னரும் தீபாவை ஊடகங்கள் பின் தொடர்கின்றன. அவரிடம் பேட்டி எடுத்து பரபரப்பு செய்தியாக வெளியிட்டு வருகின்றன ஊடகங்கள்.
தந்தி டிவியில் கடந்த வாரமே தீபாவிடம் பேட்டி எடுத்து விட்டனர். சனி மற்றும் ஞாயிறு ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென அமைச்சர் தங்கமணியில் பேட்டி ஒளிபரப்பானது.
குறிப்பிட்டது போல தீபா பேட்டி ஒளிபரப்பாகததால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தீபாவின் பேட்டியை இன்று ஒளிபரப்புகிறது.
இந்த பேட்டியில் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேறியது எப்படி? வளர்ப்பு மகன் திருமணம் பற்றியும், அரசியலுக்கு வருவது பற்றியும் தீபா கூறியுள்ளார். தீபாவின் பேட்டி பரபரப்பை பற்ற வைக்குமா?












Click it and Unblock the Notifications