அண்ணாவின் 107வது பிறந்தநாள்: ஜெயலலிதா மலர்தூவி மரியாதை… சிறப்பு மலர் வெளியிட்டார்
சென்னை: பேரறிஞர் அண்ணாதுரையின் 107 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காலை 10.05 மணிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அண்ணா பிறந்தநாள் விழா சிறப்பு மலரை ஜெயலலிதா வெளியிட தொழில் துறை அமைச்சர் தங்கமணி பெற்றுகொண்டார்.
அடுக்கு மொழி வசனங்கள் மூலம், மக்களை தன்பால் ஈர்த்த அறிஞர் அண்ணா 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில்தான் பிறந்தார். காஞ்சிபுரத்தில் நடராஜன் - பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்த அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு முதலில் நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடக் கழகத்திலும் இணைந்த அண்ணாதுரை, கருத்து வேறுபாடு காரணமாக கழகத்திலிருந்து பிரிந்து 1949ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.

முதல்வர் அண்ணா
1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக வெற்றி பெற முதலமைச்சராக பொறுப்பேற்றார் அண்ணா. சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இவரின் காலத்திலேயே நடந்தது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் , புற்றுநோய் பாதிப்பு ஏற்பட, 1969ம் ஆண்டு உயிரிழந்தார்.

முதல்வர் மரியாதை
அண்ணாவின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சிறப்பு மலர் வெளியீடு
அண்ணாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை ஜெயலலிதா வெளியிட முதல் பிரதியை, நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான தங்கமணி பெற்றுக் கொண்டார்.

அமைச்சர்கள், எம்.பிக்கள்
நிகழ்ச்சியில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பி துரை, ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுகவினர் பங்கேற்பு
அண்ணா பிறந்தநாள் விழாவில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications