மின்தட்டுப்பாட்டிற்கு திமுக சதி செய்ததாக நிரூபிக்க முடியுமா?: கருணாநிதி சவால்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''முதல்வர் ஜெயலலிதா ஏற்காட்டில் பேசும்போது, 'மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் நிலையங்கள் எல்லாம் எப்பொழுதும் போல தொடர்ந்து நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன' எனவும், 'மத்திய அரசு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது' எனவும் கூறியிருக்கிறார்.
மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அது முதலமைச்சர் கூறியிருப்பதைப் போல மத்திய அரசின் சதியினால் அல்ல. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி குறைந்ததற்குக் காரணம், ஆண்டுதோறும் மின் தேவை குறைவாக உள்ள மழைக்காலங்களில், மின் உற்பத்தி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் வழக்கமான பராமரிப்புப் பணிகள்தான்.
இந்தப் பராமரிப்புப்பணி என்பது தற்போது திடீர் என்று செய்யப்படுவதல்ல, ஒவ்வொரு ஆண்டும், குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு, பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்காகவே மின் உற்பத்தி நிறுத்தப்படும். இனியாவது முதல்வர் இது உண்மையா என்பதை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து தெளிவு பெறட்டும்.
‘மின்சாரம் தயாரிக்கத்தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது' என்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். தமிழக அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை என்று சட்டப்பேரவையிலேயே முதல்வர் தெரிவித்தார்.
மத்திய அரசு, தமிழகத்திற்குத் தேவையான நிலக்கரியை வெட்டி எடுத்துக் கொள்ள வட இந்தியாவில் இரண்டு சுரங்கங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ஒன்று, சத்தீஸ்கர் மாநிலத்தில் சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது. இரண்டாவதாக உள்ள ஒடிசா மாநிலத்தில் மந்தாகிணி சுரங்கப் பணியின் முன்னேற்றத்தில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டாததால்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
மின்வெட்டு குறித்து விரிவாகப் பேசிய முதலமைச்சர், மின் உற்பத்தியில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.கழகமும் கைகோர்த்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்குவதாக ஒரு பெரிய குற்றச்சாட்டினை ஏற்காட்டிலே முழங்கியிருக்கிறார்.
நான் முதல்வருக்கு சவால் விட்டுக்கேட்கிறேன். இந்த மின் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி நானோ, என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்களோ, மத்திய அரசிலே உள்ளவர்களிடமோ, மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களிடமோ பேசியதாகவோ, தொடர்பு கொண்டதாகவோ முதலமைச்சரால் நிரூபிக்க முடியுமா?'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications