ஜெயலலிதா மட்டும்தான் இலாகா இல்லாத முதல் முதல்வரா?: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!
சென்னை : உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா தற்போது இலாகா இல்லாத முதல்வராக இருக்கிறார். தமிழக முதல்வர் மட்டுமல்ல டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட இலாகா இல்லாத முதல்வராகவே இருக்கிறார்.
இலாகா இல்லாத அமைச்சர் எந்த துறையின் பணிகளையும் கவனிக்க வேண்டியதில்லை. அதேநேரம் அமைச்சருக்கு உண்டான அதிகாரம் மற்றும் சலுகைகள் அனைத்தும் அவருக்கு அளிக்கப்படும். இதேபோன்றதொரு நிலை கடந்த 1984-85ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது ஏற்பட்டது. அதிமுகவின் 32 ஆண்டுகால சரித்திரம் தற்போது மீண்டும் திரும்பியுள்ளது

ஓ.பி.எஸ் வசம் துறைகள்
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அரசுப் பணிகளில் தொய்வு ஏற்படா வண்ணம் இடைக்கால ஏற்பாட்டினைச் செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று ஆளுநர் அறிவித்துள்ளார்.

இலாகா இல்லாத முதல்வர்
இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா தொடருவார் என்றும், அவர் பூரண குணமடையும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 166 உட்கூறு 3-ன் படி இந்த அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டார். இதன் மூலம் மாநில அரசின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஆளுநர் விதிகளை வகுக்க முடியும். இதற்காக அமைச்சர்களின் இலாகாக்களையும் அவர் மாற்ற முடியும். நிர்வாகம் இயங்கத் தேவையான நடவடிக்கைகளை ஆளுநர் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள் மூலம் எடுக்கலாம்.

எம்.ஜி.ஆர் காலம்
கடந்த 1984-85ம் ஆண்டில் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது ஏற்பட்டது. உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். அனுமதிக்கப்பட்ட போது, அவர் நிர்வகித்து வந்த துறைகளை அப்போதைய நிதியமைச்சர் வி.ஆர்.நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று ஆளுநர் கே.எல்.குரானா அறிவித்தார். மேலும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் நெடுஞ்செழியனே தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

நெடுஞ்செழியன்
கடந்த 1987ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் பொறுப்பு முதல்வராக நெடுஞ்செழியன் செயல்பட்டார். கடந்த 1969ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா மறைந்த போதும் இதே நெடுஞ்செழியன் தான் பொறுப்பு முதல்வராக பதவி வகித்தார்.

கருப்பசாமி
கடந்த 2011ம் ஆண்டு நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பசாமி கால்நடைத்துறை அமைச்சராக பதவியேற்றார். கருப்பசாமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரது இலாகா மற்றொரு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இலாகா இல்லாத அமைச்சராக கருப்பசாமி நீடித்தார்.

செந்தூர் பாண்டியன்
கடந்த 2011 -2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் 2015ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். அவர் வசமிருந்த இந்து சமய அறநிலையத்துறை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

இலாகா இல்லாத மத்திய அமைச்சர்கள்
தமிழகத்தில் மட்டுமல்ல மத்தியிலும் இலாகா இல்லாத அமைச்சராக சிலர் பொறுப்பு வகித்த வரலாறுகளும் உண்டு. கடந்த 1962ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக டி.டி.கிருஷ்ணமாச்சாரி பொறுப்பேற்றார். இதேபோல நேரு அமைச்சரவையில் 1964 ஜனவரி முதல் ஜூன் முதல் லால் பகதூர் சாஸ்திரி இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். நேரு மறைவுக்குப் பின்னர் அவர் பிரதமராகப் பதவியேற்றார்.

மமதா பானர்ஜி
கடந்த 2003ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மம்தா பானர்ஜிக்கு நிலக்கரித் துறை ஒதுக்கப்பட்டபோது, அதை அவர் ஏற்காத நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தார்.

முரசொலி மாறன்
வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த முரசொலி மாறன் 2003ம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து அவர் வகித்து வந்த தொழில் மற்றும் வர்த்தகத் துறைகள் அருண் ஜெட்லியிடம் கொடுக்கப்பட்டன. இதனையடுத்து இலாகா எதுவும் இல்லாத கேபினட் அமைச்சராகத் தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்தார் முரசொலி மாறன்.

சந்திரசேகர ராவ்
தற்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், 2004ம் ஆண்டு அமைந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் முதலில் இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் அவருக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டது.

நட்வர் சிங்
கடந்த 2005ல் வெளியிடப்பட்ட ஐ.நா.வின் வோல்கர் கமிட்டி அறிக்கையில் இந்தியா-ஈராக் இடையிலான உணவுக்கு எண்ணெய் திட்டத்தால் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் குற்றம்சாட்டப்பட்டார். இதனால் அவரிடமிருந்த வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக அவர் பதவியில் நீடித்தார்.

அர்விந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தன் வசம் எந்தத் துறையையும் வைத்துக்கொள்ளவில்லை. அதேநேரத்தில், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மணீஷ் சிசோடியா வசம், கல்வி, நிதி, திட்டம், வருவாய், கண்காணிப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வரலாறு மிக முக்கியம்
1984 ஆண்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்று திரும்பி மீண்டு வெற்றிகரமாக தமிழகத்தை ஆண்டார் என்பது வரலாறு. எம்.ஜி.ஆரை எமனை பார்த்து சிரித்தவன் என்றும்... காலனை வென்றவன் என்றும் அப்போது அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இன்றைக்கு மருத்துவமனையில் உள்ள ஜெயலலிதாவும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.












Click it and Unblock the Notifications