காங்-திமுக துரோகம்' ''அதிமுக அங்கம் வகிக்கும் அரசு':அரைத்த மாவான ஜெ. பிரசாரம்!!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசார களம் சூடு பிடித்திருந்தாலும் பரபரப்பான குற்றச்சாட்டுகள், அதிரடி சவால்கள் என எதுவும் இல்லாத ஒரு மந்தநிலைதான் இருந்து வருகிறது. அதுவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார கூட்டங்கள் 'அரைத்த மாவை'யே அரைத்த கதையாகத்தான் இருந்து வருகிறது.
லோக்சபா தேர்தலில் இதர கட்சிகளுக்கு முன்னரே மார்ச் 3-ந் தேதியே பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார் ஜெயலலிதா. முதல் கூட்டத்திலேயே 'அதிமுகவின் தேர்தல்' அறிக்கையை அப்படியே அச்சு பிசகாமல் வழக்கம் போல வாசித்தார் ஜெயலலிதா.
அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி காங்கிரஸ் -திமுகவின் துரோகங்கள், நாட்டின் பொருளாதாரம், ராணுவ கொள்கைகள் என பாமரனுக்கு புரியாத பல விஷயங்களை எழுதி வைத்து வாசித்துவிட்டு சென்றார் ஜெயலலிதா.

ஒரே கருத்துதான்
இதைத் தொடர்ந்து மீனம்பாக்கம், நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை என பல தொகுதிகளிலும் கிட்டத்தட்ட இதே கருத்துகளை முன்வைத்தே ஜெயலலிதா பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

செய்வீர்களா? கேள்வி
இடை இடையே செய்வீர்களா? செய்வீர்களா? என்று வாக்காளர்களைப் பார்த்து கேட்பதும் சில இடங்களில் பொதுமக்கள் இதற்கு ரெஸ்பான்ஸ் செய்யாமல் இருப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

தொகுதிக்கேற்ப சில விஷயங்கள்..
நாகை தொகுதியில் பேசும் போது தொகுதி நிலவரத்துக்கேற்ப காவிரி மேலாண்மை வாரியம், மீனவர் பிரச்சனைகள் குறித்து தொட்டு சென்றார். அத்துடன் அப்பகுதியின் முதன்மை பிரச்சனையான மீத்தேன் எரிவாயு திட்ட விவகாரத்தையும் மறக்காமல் சுட்டிக் காட்டிப் பேசினார் ஜெ.

ஸ்டாலின் மீதும் விமர்சனம்
வழக்கமாக ஜெயலலிதா தமது பிரசாரத்தில் காங்கிரஸ், திமுக, அதிகபட்சமாக திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்துப் பேசுவார். இம்முறை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் விமர்சன வரம்புக்குள் கொண்டு வந்தார் ஜெயலலிதா. இரட்டை இலை போன்ற சின்னங்களுக்கு தடை கோரி ஸ்டாலின் வழக்கு தொடர அதைக் குறிப்பிட்டு பேசிய ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியினுடைய சின்னம்- கையை அனைவரும் வெட்டிவிட வேண்டும் என்றும், கையுறைகளை போட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனு கொடுப்பாரா ஸ்டாலின் என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் சைக்கிள் சின்னம் இருக்கிறது என்பதற்காக யாரும் சைக்கிள் ஓட்டக்கூடாது என மனு கொடுப்பாரா? ஒரு கட்சிக்கு மாம்பழம் சின்னம் உள்ளது. எனவே மாம்பழம் விற்பனையை தடை செய்ய வேண்டும் என மனு கொடுப்பாரா?. என்றெல்லாம் ஏகத்துக்கும் விமர்சித்தார் ஜெ.

மோடி, பாஜக பற்றி மூச்..
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி, அதன் பிரதமர் வேட்பாளர் மோடி, இடதுசாரிகள் விலகிச் சென்றது பற்றியெல்லாம் பொதுவாக ஜெயலலிதா பேசுவதே இல்லை. ஈரோட்டில் மட்டும் எத்தனையோ கட்சிகள் களம் இறங்கி உள்ளன. வேறு கட்சிகளுக்கு வாக்களித்தால் அதனால் ஆகப் போவது எதுவுமில்லை. வேறு கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் அந்த கட்சிகளும் வெற்றி பெற முடியாது என்று மறைமுகத்தான் பாஜக அணியை சாடினார் ஜெ.

அதிமுக அங்கம் வகிக்கும் அரசு
லோக்சபா தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளர் ஜெயலலிதா என்றெல்லாம் பேசப்பட்டாலும் தற்போது பிரசாரத்தில் அனைத்து இடங்களிலும் 'அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் தமிழக உரிமையை பாதுகாக்கும்' என்று பொத்தாம் பொதுவாகவே பேசி வைக்கிறார் ஜெயலலிதா.

அரைத்த மாவுதான்..
பொதுவாக ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம் என்பது அரைத்த மாவையே அரைப்பதைப் போல சில நேரங்களில் தொலைக்காட்சி சேனல்களை மாற்றியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவதாகவும் இருக்கிறது என்பதே நிதர்சனம்.












Click it and Unblock the Notifications