தமிழகம் முழுவதும் ரகசிய உலா... வாக்காளர்களை கவர் செய்யும் ஜெ.யின் ‘தேர்தல் தளபதிகள்’ யார் தெரியுமா?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ரகசிய தேர்தல் தளபதிகளாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டு, அவர்கள் தமிழகம் முழுவதும் ரகசியமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்து வருவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலையொட்டி எப்படியும் வெற்றிக் கனியைப் பறித்து, முதல்வர் நாற்காலியைத் தங்களுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

கட்சித் தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஊர் ஊராகச் சென்று, மக்களோடு மக்களாக கலந்து பேசி சிலர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இவர்களில் இருந்து சற்று வேறுபட்டு ரகசியமாக வாக்குச் சேகரிப்பு பணியில் 5 பேரைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அவர்களை தமிழ்நாடு முழுவதும் தேர்தல் தளபதிகளாக களமிறக்கியுள்ளதாம் அதிமுக.
இது குறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ஜெயலலிதா நியமித்துள்ள அந்த ரகசிய தேர்தல் தளபதி குழுவில் விஜிலா சந்தியானந்த் எம்.பி., அன்வர் ராஜா எம்.பி., மருதராஜ் எம்.பி., வேணுகோபால் எம்.பி மற்றும் தூத்துக்குடி சரவணபெருமாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனராம்.
இவர்களில் கிறிஸ்தவ சமய தலைவர்களை சந்தித்து பேச விஜிலாவும், முஸ்லிம் சமூக பெரியவர்களை சந்தித்து பேச அன்வர்ராஜாவும், முத்தரையர் சமூக பெரியவர்களை சந்தித்து பேச மருதராஜும், யாதவர் சமுதாய பெரியவர்களை சந்தித்து பேச வேணுகோபாலும், பிள்ளைமார் சமுதாய தலைவர்களை சந்தித்து பேச தூத்துக்குடி சரவண பெருமாளும் நியமிக்கப்பட்டுள்ளனராம்.
இவர்களின் பணி மாவட்டம்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சமூக பெரியோர்களைச் சந்தித்து, அப்பகுதி வாக்குகளை அதிமுகவிற்கே மொத்தமாக கவர் செய்வது தான். ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாக இந்த வேலையைச் செய்யும்படி கட்சித் தலைமை உத்தரவாம்.
இவர்களும் தங்களது கடமையை கண்ணாக செய்து வருகிறார்களாம். இந்த வியூகம் மற்ற கட்சியினருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதால், படு ரகசியமாக இவர்கள் செயல்பட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications