29வது நாளாக மருத்துவமனையில் ஜெ... சிங்கப்பூர் பிசியோ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை
சென்னை: உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 29வது நாளாக சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தவிர, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகியோரும் இடையிடையே ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு முதல் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை பிசியோ தெரபி நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோரும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப அதிமுகவினர் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியேயும் அதிமுகவினரின் பிரார்த்தனைகள் தொடர்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications