சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு... உச்சக்கட்ட பீதியில் மன்னார்குடி கோஷ்டி
சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் மன்னார்குடி கோஷ்டி பீதியில் உள்ளது.
சென்னை: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மன்னார்குடி கும்பல் பெரும் பீதியடைந்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் டி குன்கா நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.
விடுதலை செய்த குமாரசாமி
பின்னர் இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தல் ஜெயலலிதா தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி கணக்கில் தவறு இருந்ததாக கூறி 4 பேரையும் விடுதலை செய்தார்.
கர்நாடக அரசு மேல்முறையீடு
குமாரசாமியின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
நாளை தீர்ப்பு
இந்த வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவுக்கு குடைச்சல்
இதனால் சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டீ உச்சக்கட்ட பீதியில் உறைந்துள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்கும் கனவில் உள்ள நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வரவிருப்பது சசிகலாவுக்கு குடைச்சலைக் கொடுத்துள்ளது.
மன்னார்குடி கோஷ்டிக்கு தலையில் இடி
ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாளை வெளியாகும் என கூறப்பட்டிருப்பது சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது.
தமிழகமே எதிர்ப்பார்க்கும் தீர்ப்பு
தமிழத்தில் நடைபெற்று வரும் அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் சசிகலாவுக்கு எதிராக இந்த தீர்ப்பு இருக்குமா என தமிழகமே உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துள்ளது












Click it and Unblock the Notifications