ஈரான் சிறையில் வாடும் 4 தமிழக மீனவர்கள்: மீட்க கோரி மோடிக்கு ஜெ. கடிதம்!
சென்னை: ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா எழுதி உள்ள கடிதத்தில், ''கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எல்.சசிகுமார், எஸ்.ஆண்டனி, ஆரோக்கியம், எஸ்.அந்தோணி ஆகிய 4 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் கத்தாருக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி கத்தார் நாட்டின் கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக ஈரான் கடல் பகுதிக்குள் சென்று விட்டனர். அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரான் நாட்டு கடலோரப் பாதுகாப்புப் படையினர் தமிழக மீனவர்கள் 4 பேரையும் கைது செய்து அந்நாட்டு கிஷ் தீவில் உள்ள சிறையில் அடைத்து உள்ளனர்.
ஈரான் சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்கள், அவர்களின் வருமானத்தை நம்பியே உள்ளன. எனவே, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.