'அம்மா' பேசுகிறார்.. அப்பல்லோ அறிக்கை... அதிமுகவினர் உற்சாகம் !
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களுடன் பேசி வருவதாகவும், அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை குறித்து பல்வேறு அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டு வருகிறது.
ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிக்கை எதையும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லை. இந்த நிலையில் முதல்வரின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று 11வது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர் குழு ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது. தொற்று நோய், சர்க்கரை நோய், இதயம், நுரையீரல், நீரிழிவு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வர் உடல்நலம் நல்ல முன்னேற்றம்.. நன்றாக பேசுகிறார் - அப்பல்லோ அறிக்கை #Jayalalithaa Apollo Hospital pic.twitter.com/89SqnBoJrx
— Oneindia Tamil (@thatsTamil) October 21, 2016
பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. முதல்வருக்கு நிபுணர்களின் ஆலோசனைப்படி ஊட்டச்சத்து உணவு அளிக்கப்படுகிறது. தற்போது ஜெயலலிதா மருத்துவர்களுடன் பேசி வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு பிறகு இன்று முதல்வர் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் மருத்துவர்களுடன் பேசிவருவதாக கூறியிருப்பது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக 10வது அறிக்கை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகியது.