பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியது நியாயமானதல்ல உடனே திரும்ப பெற ஜெயலலிதா வலியுறுத்தல் !
சென்னை: பெட்ரோல்,டீசலுக்கான கலால் வரியை உயர்த்தும் நடவடிக்கை நியாயமானதல்ல வரி உயர்வை உடனே மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எண்ணெய் நிறுவனங்கள் 15.1.2016 முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 32 காசுகள் வீதமும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 89 காசுகள் வீதமும் குறைத்துள்ளன. உலகச் சந்தையில் தற்போது நிலவும் பெட்ரோலியப் பொருட்களின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைக்கவில்லை. பெயரளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து விட்டு, உடனே மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 75 காசுகள் வீதமும், டீசலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வீதமும் உயர்த்தி உள்ளது.

இதே போன்று தான் கடந்த 1.1.2016 அன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பெயரளவுக்கு குறைத்து விட்டு கலால் வரியை உடனே மத்திய அரசு உயர்த்தியது. இது போன்று மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தும் நடவடிக்கை நியாயமானதல்ல. எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இது வரை பெட்ரோலுக்கான கலால் வரியை 10 ரூபாய் 77 காசு என்ற அளவிலும், டீசலுக்கான கலால் வரியை 12 ரூபாய் 7 காசு என்ற அளவிலும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலை தற்போது குறைந்துள்ள நிலையில், அந்த விலைக் குறைவின் பயன் பொதுமக்களுக்கு சென்றடையவில்லை. எனவே தான், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை இன்னமும் மிக அதிக அளவில் உள்ளது.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014 நவம்பர் முதல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தாமல் இருந்திருந்தாலே இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 10 ரூபாய் மற்றும் 12 ரூபாய் அளவிற்கு குறைந்திருக்கும்.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல் மற்றும் டீசல் நிர்ணயக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நான் பல முறை தெரிவித்துள்ளேன். அவ்வாறு மாற்றியமைப்பதன் மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்னமும் குறைக்கப்பட ஏதுவாகும். மத்திய அரசு கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் மீது 10 ரூபாய் 77 காசு அளவிற்கும், டீசல் மீது 12 ரூபாய் 7 காசு அளவிற்கும் உயர்த்தி விதிக்கப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications