ஜெ. உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடம்.. அப்போலோ அதிர்ச்சி அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் இருந்து அவரது உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவ குழுவின் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதியில் இருந்து நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணம் அடைந்துவிட்ட நிலையில், நேற்று மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலம் பின்னடைவைக் கண்டது. இதனையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், டெல்லியில் இருந்து 4 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். கவலைப்படும்படி ஒன்றும் இல்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து 13வதாக ஓர் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை, ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றும், அவர் தொடர்ந்து மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எக்மோ என்று சொல்லக் கூடிய செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுவரை, அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ள எந்த ஒரு மருத்துவ அறிக்கையிலும் "வெரி கிரிட்டிக்கல்" என்ற சொல் இல்லை. ஆனால் முதன் முறையாக தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் "வெரி கிரிட்டிக்கல்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே கவலை அதிகரிக்கச் செய்துள்ளனது.












Click it and Unblock the Notifications