கருணாநிதியும், ஜெயலலிதாவும் கறுப்பு இல்லையே.. தருண் விஜய்க்கு திமுக பதிலடி
சென்னை: ஜெயலலிதா கறுப்பு நிறம் கிடையாது என கூறி பாஜக எம்.பி. தருண் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
கென்ய நாட்டை சேர்ந்த இளைஞர் இந்தியாவில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளித்த பேட்டியொன்றில், இந்தியர்கள் நிறவெறி கொண்டவர்கள் கிடையாது. இத்தாக்குதல் அதற்காக நடந்திருக்காது என தருண் விஜய் விளக்கம் அளித்தார்.
அப்போது இந்தியாவில் பல்வேறு நிறம் கொண்ட மக்கள் வாழ்கிறோம். தென் இந்தியாவில் கறுப்பு நிறம் அதிகம். அதற்காக நாங்கள் விரோதம் பாராட்டவில்லையே என்றும் அவர் கூறினார்.
கண்டன குரல்கள்
தென் இந்தியர்களை கறுப்பினத்தவர்களோடு ஒப்பிட்டு தருண் பேசியதை பலரும் கண்டித்து வருகிறார்கள். சோஷியல் மீடியாக்களிலும் கண்டிப்புகள் குவிகின்றன. இதையடுத்து தனது பேச்சுக்கு தருண் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார். தனது பேச்சின் அர்த்தம் வேறு என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
திமுக கிண்டல்
இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், தருண் விஜய் பேச்சு நகைச்சுவையானது. அனைத்து தென் இந்தியர்களும் கறுப்பு நிறத்தவர்கள் கிடையாது. எங்கள் கட்சி தலைவர் கருணாநிதியோ, மறைந்த ஜெயலலிதாவோ கறுப்பு நிறம் கிடையாது. வடக்கு மற்றும் தென் இந்தியா நடுவே பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது தருண் விஜய் பேச்சு என்றார்.
குஷ்பு அறிவுரை
காங்கிரஸ் கட்சி நிர்வாகி நடிகை குஷ்பு கூறுகையில், இது பல கலாசாரம் கொண்ட நாடு. எனவே தருண் விஜய் பேசும்போது மிகவும் யோசித்து பேசியிருக்க வேண்டும். நிறத்தை கொண்டு ஒருமைப்படுத்த முயற்சி செய்யக் கூடாது என்றார்.
சப்பைகட்டு
பாஜக செய்தித்தொடர்பாளர் சாய்னா கூறுகையில், பாஜகவை பொறுத்தளவில், மொழி, இனம், கலாசார பேதம் பார்ப்பதில்லை. தருண் விஜயின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று, தென் இந்தியர்களின் கோபத்தை மடைமாற்றம் செய்யும் வகையில் தெரிவித்தார்.