இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி... மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. கடந்த மாதம் 34 தமிழக மீனவர்களைக் கைது செய்து, அவர்களது 7 படகுகளையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்தது. அதேபோல், நேற்று முன்தினமும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, ஆறு பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

இந்நிலையில், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால், இரு தரப்பு மீனவர்களையும் ஒரே நேரத்தில் விடுவிக்க முடிவானது. இதன்படி, 86 தமிழக மீனவர்களை விடுக்கப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அக்டோபர் மாதம் 24ல், 34 தமிழக மீனவர்களை, ஏழு படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது.
நேற்று, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, ஆறு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும் அவர்களது வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.இந்தியா- இலங்கை இடையே, 1974, 1976ம் ஆண்டுகளில் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம்தான் இந்தப் பிரச்னைக்கு காரணம். இதை, மத்திய அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்துள்ளேன்.
மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்காக, 1,520 கோடி ரூபாயை விரைவில் ஒதுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். இவை தொடர்பான என் மனுவை, வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழக எம்.பி.,க்கள் குழு அளித்துள்ளது.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும், இன்னும் சில நாட்களில் விடுவிக்க, நடவடிக்கை எடுப்பீர்கள் என, நம்புகிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications