இல்லந்தோறும் இணையம்... தொடங்கி வைத்தார் ஜெ. .. மற்றும் ஒரு "எமர்ஜென்சி" திட்டம் தொடக்கம்!
சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். ஆட்சி முடிய இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில் 110 அறிவிப்புகளில் வெளியிட்ட திட்டங்களை தினசரி அவசரம் அவசரம் அவசரமாக தொடக்கி வைத்து வருகிறார் ஜெயலலிதா.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் (Broadband Services) மற்றும் இதர இணைய சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழ்நாடு பைபர் நெட்வொர்க் கார்ப்பரேசன் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். கிராமங்களில் இல்லம்தோறும் இன்டர்நெட் தொடர்பு ஏற்படுத்துவதே இதன் நோக்கம், 12,524 ஊராட்சி கிராமங்கள் இணையம் மூலம் இணைக்கப்படும். அரசு சேவைகள் இணையம் மூலம் பெற முடியும். இதற்கென ஆப்டிகல் பைபர், கிராமங்களில் பதிக்கப்படும். மத்திய அரசு உதவியுடன் 3 ஆயிரம் கோடி செலவில், மாநில அரசு நிறைவேற்றும்.
அனைத்து கிராமங்கள், நகரங்கள் தோறும் இணைய சேவை இணைப்பு வழங்கப்படும், இணையதள வழி டிவி கொண்டு வரப்படும். இ - சேவை மையங்கள் வழியாக அரசு உதவி பெறும் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 10,034 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 70 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும் இணையம் மூலம் கூடுதலாக 300 சேவைகள் வழங்கப்படும் என்றும் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார் ஜெயலலிதா.
அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் "இல்லந்தோறும் இணையம்" திட்டம் தமிழக அரசின் தொலைநோக்கு திட்ட அறிக்கை 2023ல் குறிப்பிட்டபடி, மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள மனித ஆற்றலை பயன்படுத்தி புதிய முயற்சிகளை ஊக்குவித்திடும் வகையில் சென்னை - தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் 3 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்முனைவோர் மையத்தை (Startup Warehouse)தொடக்கி வைத்தார்.
மாணாக்கர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்காக மேகக்கணினி சார்ந்த சேவைகள் மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள் ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம், சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் கணினி உள்கட்டமைப்பினை சிறப்புற பயன்படுத்தி பல்வேறு துறைகளின் கணினி பயன்பாடுகளை ஏற்றம் செய்யும் பொருட்டு 10 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேகக்கணினிய அமைப்பு என மொத்தம் 13 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிலான தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடக்கி வைத்தார்.
ஆட்சி முடியப்போகும் நேரத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதையும், 110 அறிவிப்புகளின் கீழ் வெளியிட்ட திட்டங்களையும் ஜெயலலிதா அவசரகதியில் அரைகுறையாக தொடங்கி வைப்பதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications