ஜெகன்- ஜெயசிங் நட்டர்ஜி.. உள்ளுக்குள் நண்பர்கள்.. வெளியில் எலியும் பூனையும்!
தூத்துக்குடி: டயோசிசன் தேர்தலில் தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் ஜெகனின் ஆதரவோடு வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் ஜெயசிங், தற்போது எம்.பி தேர்தலில் அவரை எதிர்த்து களத்தில் சந்திக்கிறார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி மற்றும் தி.மு.க வேட்பாளர் என்.பி.ஜெகன் ஆகிய இருவருமே கிறிஸ்தவ நாடார் வகுப்பைச் சார்ந்தவர்கள்.
தூத்துக்குடி, கிறிஸ்தவ அமைப்புக்கான டயோசிசன் தேர்தலில் ஒரே அணியில் இருந்தவர்கள். இதில் ஜெயசிங் நட்டர்ஜி சாயர்புரம் போப் கல்லூரியின் தாளாளராக இருக்கிறார்.
தி.மு.க மாவட்ட செயலாளர் பெரியசாமி மற்றும் அவரது மகன் ஜெகனின் ஆதரவால்தான் கல்லூரியில் தாளாளராக டயோசிசன் தேர்தலில் வெற்றி பெற்ற என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒரு நாளிதழில் அ.தி.மு.க விளம்பரங்களை போடக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளாராம். ஆனால், அதையும் மீறி நட்டர்ஜி அந்த நாளிதழில் முழு நீள பக்க விளம்பரம் பிரசுரித்துதான் தன் முதல் பிரச்சாரத்தையே தொடங்கியிருக்கிறார்.
இந்த விவகாரத்தை தனக்கும், தன் ஆதரவாளர்களுக்கும் சீட் கிடைக்காத காட்டத்தில், நட்டர்ஜிக்கு எதிராக காரணத்தை தேடிக்கொண்டிருந்த அ.தி.மு.க புள்ளிகள் தலைமைக்கு வரிசையாக புகார் அனுப்பி வருகிறார்களாம். அதிமுகவினரின் புகார் விசயம் அறிந்த நட்டர்ஜி கலக்கத்தில் இருக்கிறாராம்.
வேட்புமனு தாக்கல் செய்யும் வரை பெயரை மாற்றாமல் இருக்கவேண்டுமே என்று வேண்டிக்கொண்டிருக்கிறாரா ஜெயசிங் நட்டர்ஜி.