சென்னை: பட்டப்பகலில் நகை வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.70 லட்சம் பணம், தங்க நகைகள் கொள்ளை
சென்னை: ராயபுரத்தில் பட்டப்பகலில் வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டு ரூ. 70 லட்சம் தங்கநகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம் ஆதம் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ம.ரமேஷ் (47). இவர் அங்கு தரைத்தளத்தில் நகைக் கடையும், அடகுக் கடையும் நடத்தி வருகிறார். கடையின் மேல் ரமேஷின் வீடு உள்ளது. ரமேஷ் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தங்கநகை அடகு வைக்க வேண்டும் என கூறினாராம். உடனே ரமேஷ், அவரை கடையில் காத்திருக்கும்படி கூறினாராம். சிறிது நேரத்தில் கடையின் ஓரத்தில் உள்ள பின்பக்க வாசல் வழியாக இருவர் வந்தனராம்.
அவர்கள் திடீரென ரமேஷிடம் கத்தியை காட்டி மிரட்டிக்கு கடைக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கெனவே காத்திருந்த நபரும், அந்த இரு நபர்களும் சேர்ந்து ரமேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபர்கள்,ரமேஷை கட்டிப்போட்டுவிட்டு கடையில் இருந்த ரூ. 60 லட்சம் தங்கநகை, ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர்.
தகவலறிந்த ராயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். சம்பவ இடத்தை காவல் இணை ஆணையர் நிர்மல் குமார் ஜோஷி, துணை ஆணையர் செல்வக்குமார் ஆகியோர் பார்வையிட்டு, விசாரித்தனர்.
இது தொடர்பாக ராயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த கடையில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அந்தப் பகுதியில் உள்ள வேறு கேமராகளில் அந்த 3 மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தினால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications