முருகா காப்பாத்துப்பா!!... நகையை திருடிவிட்டு சாமி கும்பிட்ட பலே திருடன் கைது!
புதுச்சேரி: கோவிலுக்குப் போய் நல்ல புத்தியைக் கொடுப்பா என்று சாமி கும்பிடுவார்கள். ஆனால் புதுச்சேரி அருகே சாமி கழுத்தில் இருந்த நகையை ஆட்டையைப் போட்ட திருடன் ஒருவன் போலீசிடம் இருந்து காப்பாத்துப்பா என்று கும்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த இந்த காட்சிகளை வைத்து திருடனை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டி பேட்டையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல் சனிக்கிழமையன்று காலை நடை திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சிலைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க சங்கிலிகள் காணாமல் போய் இருப்பதைப் பார்த்து பூசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அறங்காவலர் குழுவினர் லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் தங்க சங்கிலிகளைத் திருடிய நபரின் உருவம் பதிவானது தெரிய வந்தது.
காலை 7. 53 மணிக்கு கோவிலுக்குள் நெற்றியில் திருநீருடன் ஒரு நபர் உள்ளே நுழைகிறார். பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தபடி சுற்றும் முற்றும் பார்க்கும் அந்த நபர், கோவிலில் ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு கருவறைக்குள் நுழைகிறார். ஒரு சில வினாடிகளில் திரும்பி வந்து மீண்டும் பயபக்தியுடன் சாமி கும்பிடுகிறார். முதலில் வெறும் கையுடன் இருந்த அந்த நபரின் கையில் கருவறைக்கு சென்று திரும்பிய பின்னர் மஞ்சள் நிறத்தில் சங்கிலி போன்ற பொருள் தெளிவாகத் தெரிகிறது.
இந்தக் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இந்தக் காட்சிகளின் மூலம் அந்த நபர்தான் சாமி சிலைகளின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகளை திருடிச் சென்றான் என்பது உறுதிப் படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஏழுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.
நகையை திருடிவிட்டு சாமியை வேண்டினால் காப்பாற்றிவிடுவார் என்று நம்பினாரோ என்னவோ, சிசிடிவி காட்டிக்கொடுத்துவிடும் என்பதை கவனிக்காமல் இருந்துவிட்டார் அந்த பலே திருடன்.












Click it and Unblock the Notifications