வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது சட்டவிரோதமானது: இராச்குமார்
சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது சட்டவிரோதமானது என தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் இராச்குமார் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
எந்த வித அத்தியாவசிய சேவைகளுக்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் இப்போது தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன்படி இனிவரும் தேர்தல்களில் ஆதார் எண் இல்லாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற நிலை ஏற்படும். மேலும் 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் கைரேகையை பதிவு செய்தே தேர்தலில் வாக்களிக்கும் நிலையை உருவாக்குவோம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது அடிப்படை மக்களாட்சி உரிமைக்கு எதிரானது. தனிமனித அடையாளங்களை எந்த தவறும் செய்யாத பொதுமக்கள் யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுடைய கை ரேகை, கண் ரேகை, முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி யாவும் இனி எளிதில் பெருநிருவனங்களுக்கு சென்று சேரும். இதனால் தனிமனித சுதந்திரம் என்பது முற்றிலும் பறிக்கப்படும் நிலை உருவாகும்.
ஆதார் எண்ணை எந்த ஒரு சேவைக்கும் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பு இருக்கும் போது தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது சட்ட விரோத நடவடிக்கையாகும். ஒரே ஒரு அடையாள அட்டை இருந்தாலும் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு மறுக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கையை நாம் எதிர்க்க வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் உடனடியாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தல் வேண்டும். சமூக ஆர்வலர்கள் பொதுநல வழக்கு உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு முழு ஒத்துழைப்பை நல்க நாங்கள் அணியமாக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications