அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்ட கூவத்தூரில் பத்திரிகையாளர்கள் திடீர் மறியலால் பரபரப்பு
அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட் முன்பாக பத்திரிகையாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட் முன்பாக பத்திரிகையாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் 90 பேர் கல்பாக்கம் அருகே கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக இந்த எம்.எல்.ஏக்களை சசிகலா நேரில் சந்தித்து தம்மை ஆதரிக்க கெஞ்சி வருகிறார், இந்த ரிசார்ட் பகுதிக்கு செல்ல பத்திரிகையாளர்கள், பொதுமக்களுக்கு மன்னார்குடி குண்டர்கள் தடை விதித்திருந்தனர். இந்த குண்டர்படைக்கு போலீஸும் ஆதரவாக இருந்து வருகிறது.
இதனிடையே இன்று மாலை பொதுமக்களும் செய்தியாளர்களும் எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்ட கூவத்தூர் ரிசார்ட்டை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயற்சித்தனர். ஆனால் போலீசார் தடையை மீறி ரிசார்ட் அருகே பொதுமக்களும், செய்தியாளர்களும் சென்றனர்.
அங்கு செய்தியாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தங்களிடம் இருந்து மன்னார்குடி குண்டர்கள் பறித்த செல்போன்கள், கேமராக்களை திரும்ப பெற்றுத் தர வேண்டும்; ரிசார்ட்டுக்குள் செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டும் என கோரி மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு அதிமுக நிர்வாகிகள் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சில பத்திரிகையாளர்களை மட்டும் ரிசார்ட்டுக்குள் அழைத்து சென்றது அதிமுக கோஷ்டி.
இந்த மறியலால் போலீசார் அங்கு பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களின் செல்போன், கேமராக்கள் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை செய்தியாளர்கள் கைவிட்டனர்.