ஜெ. கைரேகை சான்றளித்த டாக்டர் பாலாஜிக்கு சம்மன்... நேரில் ஆஜராக கமிஷன் உத்தரவு!
ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த டாக்டர் பாலாஜிக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அளித்துள்ளது.
சென்னை : அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த டாக்டர் பாலாஜி விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அமைத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரண கமிஷன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது விசாரணையைத்தொடங்கியுள்ளது. திமுக டாக்டர் சரவணனிடம் இருந்து விசாரணைப் புள்ளியானது தொடங்கியது.

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். போஸின் வேட்பு மனுவில் இடம்பெற்றிருந்தது ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் சந்தேகம் எழுப்பி இருந்தார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விசாரணை ஆணையத்திடமும் இது தொடர்பான ஆவணங்களை சரவணனன் அளித்திருந்தார். அதில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது என்று சரவணன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜிக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனை ஏற்று டாக்டர் பாலாஜி நாளை மறு தினம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இதே போன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவின் கணவரும் எம்ஜேடிஎம்கே கட்சியின் தலைவருமான மாதவனுக்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அளித்துள்ளது. அவர் நாளை ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களை 19 கேள்விகள் கொண்ட பிரமாணப்பத்திரமாக மாதவன் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications