தலைமறைவு நீதிபதி கர்ணன்... தீர்ப்பை எதிர்த்து சுப்ரீகோர்ட்டில் மேல்முறையீடு?
உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தா நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. நீதிபதி கர்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே சென்னை வந்த நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்கி இருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக மேற்கு வங்க போலீஸ் டி.ஜி.பி. சுரஜித்கர் புர்கயஷா தலைமையிலான 5 அதிகாரிகள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். பின்னர் மேற்கு வங்க டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர் கரன்சின்ஹாரவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்

தலைமறைவா?
இதனிடையே நேற்று அதிகாலையில் வாக்கிங் செல்வதாக வெளியே புறப்பட்டு சென்ற நீதிபதி கர்ணன் திடீரென தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் போலீசாரின் கவனத்தை திருப்புவதற்காக தன்னுடைய பாதுகாவலரை தொலைபேசியில் அழைத்து தான் காளஹஸ்தி செல்வதாக கூறினாராம் நீதிபதி கர்ணன்.

அலைந்த போலீஸ்
இதனால் சென்னை வந்த கொல்கத்தா போலீஸ் காளஹஸ்தி சென்றனர், அவர் அங்கு இல்லாததால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து நீதிபதி கர்ணனின் தொலைபேசி சிக்னலைக் கொண்டு அவரைத் தேடி ஆந்திர மாநிலம் தடா சென்றனர். ஆனால் அவர் அங்கும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய கொல்கத்தா போலீசார் சென்னையில் தங்கியுள்ளனர்.

கடலூரில் கண்காணிப்பு
நீதிபதி கர்ணன் கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு செல்லலாம் என்று கருதப்படுவதால் தமிழக போலீசார் உதவியுடன் மேற்கு வங்க போலீசார் அவரது சொந்த ஊரிலும் கண்காணித்து வருகின்றனர். நீதிபதி கர்ணனை கைது செய்ய வேண்டும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் மேற்கு வங்க போலீசார் திணறி வருகின்றனர்.

மேல்முறையீடு
இந்நிலையில் தன் மீதான கைது நடவடிக்கை தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கர்ணன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சார்பில் இன்று தாக்கலாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே நீதிபதி கர்ணன் தலைமைறைவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications